தவிர்க்க முடியாத சக்தி.. தமிழக அரசியல் களத்தில் விசிக-தவெக இணைந்தே பயணிக்கும் - திருமாவளவன்!!
சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி வலுப்பெறும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு, கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. தமிழ்த் தேசிய உணர்வை வலுப்படுத்துவதும், மாநில சுயாட்சி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துவதும் இம்மாநாட்டின் முதன்மை நோக்கங்களாகக் கூறப்படுகிறது.
கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான தமிழ்த் தேசியம், சாதி ஒழிப்பு, மகளிர் விடுதலை, பாட்டாளி வர்க்க விடுதலை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றுடன் இணைத்து நீண்டகாலமாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது. உளுந்தூர்பேட்டை நகர்ப் பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்து இனிவரும் தேர்தல்களில் இணைந்து பயணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். “இன்றைக்கு ஆளுகிற முதலமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களோடு நாம் கூட்டணி வைத்திருக்கிறோம். விசிகவும் தவெகவும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!
சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இந்தக் கூட்டணி வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். சகோதரத்துவ உறவு மாநாட்டில் தவெக தலைவர் ஜோசப் விஜய் அவர்களுடனான நட்புறவையும், கூட்டணி குறித்து எடுக்கப்பட்ட முடிவையும் விரிவாகப் பேசிய திருமாவளவன், “ஆளுங்கட்சியாக வரவேண்டும். இத்தனை ஆண்டுகாலம் ஆளுங்கட்சிகளோடு நாம் கூட்டணி வைத்தோம். இனி நாம் ஆளுங்கட்சியாக வரவேண்டும்” என வலியுறுத்தினார்.
இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இரு முக்கியக் கட்சிகளின் கரங்கள் கோர்க்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தல் களத்தில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. மாநாட்டுத் திடலில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியதால், திருமாவளவன் தனது உரையைச் சுருக்கி முடித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்! முதலமைச்சருக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை!