×
 

பழங்குடி மக்கள் ஆசைவார்த்தை கூறி மதமாற்றம்?! மதநம்பிக்கையை மாற்ற எவருக்கும் உரிமையில்லை! அமித்ஷா கொந்தளிப்பு!

பொது சிவில் சட்டம் பழங்குடியினரை பாதிக்காது. மற்றொரு நபரின் மதநம்பிக்கையை கட்டாயத்தின் பேரில் மாற்றுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை.' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) பழங்குடியின மக்களின் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் அல்லது உரிமைகளை எந்த வகையிலும் பாதிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக பழங்குடியின மக்களுக்காக தீவிரமாகப் போராடிய தியாகி பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பழங்குடியின மாநாட்டில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.

அமித் ஷா பேசுகையில், “பொது சிவில் சட்டம் குறித்து சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அதை நம்ப வேண்டாம். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும்போது, பழங்குடியின சமூகங்களுக்கு சிறப்பு விலக்கு அளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் எந்தவொரு பழங்குடி சகோதர சகோதரிகளின் பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்களிலும் தலையிடாது” என்றார்.

மேலும், “நக்சல் வன்முறை காரணமாக பல ஆண்டுகளாக பழங்குடியின மக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வந்தது. தற்போது நாடு நக்சல் பிரச்னையிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகிறது. பழங்குடி மக்களை மதம் மாற்றுவதற்கு ஆசை வார்த்தைகளோ, தூண்டுதல்களோ பயன்படுத்தக் கூடாது. மற்றொரு நபரின் மத நம்பிக்கையை கட்டாயப்படுத்தி மாற்ற எவருக்கும் உரிமை இல்லை” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: லடாக் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! நேரடி பேச்சுவார்த்தைக்கு லடாக் தலைவர்கள் கோரிக்கை..!!

பிர்சா முண்டாவின் தியாகத்தை நினைவுகூர்ந்த அமித் ஷா, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்தார். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் பழங்குடியின மக்களின் பிரச்னைகள், அவர்களது உரிமைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. அமித் ஷாவின் உரை பழங்குடியின சமூகத்தினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பான கவலைகளை அவர் நிவர்த்தி செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பிர்சா முண்டா போன்ற தியாகிகளின் பங்களிப்பால் இன்று பழங்குடியின மக்கள் தங்களது உரிமைகளுக்காக வலுவாகக் குரல் எழுப்ப முடிகிறது என்று பலரும் பாராட்டுகின்றனர். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப் மகன் திருமணத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்பு! ஈரான் போர் காரணமாக அதிரடி முடிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share