16 வயசுக்கு கம்மியா? சோஷியல் மீடியா யூஸ் பண்ண தடை!! ஆந்திர அரசு தீவிர ஆலோசனை!
சிறுவர் - சிறுமியர் சமூக ஊகடங்களை பயன்படுத்துவது நல்லதல்ல. அவர்களால், அதன் உள்ளடகத்தை புரிந்துகொள்ள முடியாது. சிறார்கள் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவதால், பல்வேறு பின்விளைவுகள் ஏற்படுகின்றன.
உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக டீன் ஏஜ் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதன் தாக்கம் கடுமையாக உள்ளது. மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் உழைப்பு குறைவு, உண்மை வாழ்க்கையில் இருந்து தூரமாவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துவதாக சமூக ஊடகங்கள் குற்றம் சாட்டப்படுகின்றன. இதனால், சில நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஆஸ்திரேலியா உலகிலேயே முதல் நாடாக, 16 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், டிக்டாக், யூடியூப், ஸ்னாப்சாட், ரெடிட் உள்ளிட்டவை) பயன்படுத்த தடை விதித்துள்ளது. டிசம்பர் 10, 2025 முதல் அமலுக்கு வந்த இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் புதிய கணக்கு தொடங்க முடியாது.
ஏற்கனவே உள்ள கணக்குகள் முடக்கப்படும். இதை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு 49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் 3 கோடி ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படும். சட்ட அமலுக்கு வந்த முதல் மாதத்திலேயே சுமார் 47 லட்சம் சிறார்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உண்மையான களநிலவரம் என்ன? சொதப்பும் உளவுத்துறை!! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுகடுப்பு!
இந்தியாவிலும் இதுபோன்ற தடை அமல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆராய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் (மதராஸ் ஹைகோர்ட்) அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகள் பாலியல் உள்ளடக்கத்துக்கு ஆளாவதை தடுக்கும் வழக்கில், ஆஸ்திரேலியா போன்ற சட்டத்தை இயற்றலாம் என்று நீதிமன்றம் கூறியது. இதனால், மத்திய அரசு இதை ஆராய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திரா மாநில அரசு இதுபோன்ற தடையை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக மாநில தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் ப்ளூம்பெர்க் நிறுவனத்திடம் பேசிய அவர், "சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது நல்லதல்ல. அவர்கள் உள்ளடக்கத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது.
இதனால் மன அழுத்தம், பின்விளைவுகள் ஏற்படுகின்றன. வலுவான சட்ட கட்டமைப்பு தேவை. ஆஸ்திரேலியாவின் 16 வயதுக்கு கீழ் தடை சட்டத்தை ஆந்திரா ஆராய்ந்து வருகிறது" என்றார்.
ஆந்திராவில் இத்தகைய சட்டம் அமலுக்கு வந்தால், இந்தியாவில் சிறார்களுக்கு சமூக ஊடக தடை விதித்த முதல் மாநிலம் என்ற பெருமையை பெறும். இது தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெற்றோர்கள், கல்வியாளர்கள், மனநல நிபுணர்கள் ஆகியோர் இதை வரவேற்கும் நிலையில், சிலர் இது சுதந்திரத்துக்கு எதிரானது என்று விமர்சிக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் அனுபவத்தை பார்த்து இந்தியாவில் எப்படி அமல்படுத்தலாம் என்பது அடுத்த கட்ட விவாதமாக உள்ளது.
இதையும் படிங்க: திமுக கூட ரொம்ப உறவாடாதீங்க! காங்., மாவட்ட தலைவர்களுக்கு மேலிடம் போட்ட வாய்மொழி உத்தரவு!