×
 

போதை மாத்திரை கொடுத்து வன்கொடுமை.... திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி புகாரால் பெங்களூருவில் பரபரப்பு!

பெங்களூருவில் படித்து வரும் திருப்பூரைச் சேர்ந்த 19 வயது மாணவிக்கு, போதை மாத்திரை கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உயர்கல்வி பயின்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, போதை மாத்திரை கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் திருப்பூரைச் சேர்ந்த அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், அவரது நண்பர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த அந்த மாணவி, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் ராஜாஜி நகரைச் சேர்ந்த டிக்ஸன் சாண்டோ மற்றும் அவரது நண்பர் நிகில் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ஜக்கூரில் உள்ள ஒரு பங்களாவில் நடைபெறும் விருந்துக்கு அந்த மாணவி அழைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட குளிர்பானம் அல்லது உணவில் போதை மாத்திரை கலந்து கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மாணவி மயக்கமடைந்த நிலையில், டிக்ஸன் மற்றும் நிகில் ஆகிய இருவரும் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இதனை யாரிடமாவது சொன்னால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!

உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட மாணவி, தனது சகோதரரின் ஆதரவுடன் பெங்களூரு அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் டிக்ஸன் மற்றும் நிகில் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதற்கிடையில், கைதான நிகில் என்பவர் அந்த மாணவிக்கு எதிராக ஒரு பதில் புகாரை அளித்துள்ளார். தன்னை மிரட்டி ₹10 லட்சம் பணம் பறிக்க அந்தப் பெண் முயன்றதாகவும், அதற்குப் பணியாததால் தனது நண்பருடன் சேர்ந்து பொய்யான புகாரை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெங்களூரு போலீசார் தற்போது இருதரப்பு புகார்களையும் பதிவு செய்து, அந்த மாணவிக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றமா அல்லது இதில் ஏதேனும் பின்னணி உள்ளதா எனப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
 

இதையும் படிங்க: பெங்களூருவை திக்குமுக்காட வைக்கும் டிராஃபிக்..!! ஐடி ஊழியர்களுக்கு வருகிறது WFH..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share