×
 

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க!! எங்ககிட்ட கொடுத்திருங்க! வங்கதேச புதிய அரசு இந்தியாவுக்கு வைக்கும் டிமாண்ட்!

ஷேக் ஹசீனாவை விசாரணைக்காக இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் என்று தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றிய வங்கதேச தேசியவாத கட்சி வலியுறுத்தி இருக்கிறது.

வங்கதேசத்தில் நடந்த சமீபத்திய பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது வங்கதேச தேசியவாத கட்சி (BNP). 2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, இது முதல் பொது தேர்தல். BNP தலைவர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான கூட்டணி 299 இடங்களில் 212 இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மை பெற்றுள்ளது. 

தாரிக் ரஹ்மான் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். அவர் விரைவில் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி 18 மாத இடைக்கால ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளது.

இந்நிலையில், BNP ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 2024 ஆகஸ்டில் போராட்டத்தால் ஆட்சியிழந்த ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் மீது கொலைகள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. 2025 நவம்பரில் அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வங்கதேசத்தில் நடந்தது கேலிக்கூத்து! தேர்தல் அல்ல?! ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஷேக் ஹசீனா கோரிக்கை!

BNP நிலைக்குழு உறுப்பினர் சலாவுதீன் அகமது கூறியதாவது: “ஷேக் ஹசீனாவை முறையான விசாரணைக்கு உட்படுத்த வங்கதேசத்திற்கு நாடு கடத்த இந்தியாவை எங்கள் கட்சி முறையாக வலியுறுத்தும். வெளியுறவு அமைச்சர் ஏற்கனவே இந்த விவகாரத்தை முன்னெடுத்துள்ளார். 

நாங்கள் அதை வரவேற்கிறோம். சட்டப்படி அவரை நாடு கடத்துமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். இது இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையேயான பிரச்னை. வங்கதேசத்தில் விசாரணையை எதிர்கொள்ள அவரை திருப்பி அனுப்புங்கள் என இந்தியாவிடம் கோரியுள்ளோம். இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் சமநிலையான நட்புறவை வங்கதேசம் விரும்புகிறது.”

இந்த கோரிக்கை இந்தியா-வங்கதேச உறவுகளில் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. பிரதமர் மோடி தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து, ஜனநாயக, முற்போக்கு வங்கதேசத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஹசீனா விவகாரம் இரு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை சூடுபிடிக்கச் செய்யும். ஹசீனா தேர்தலை ஏமாற்றுவேலை என்று கண்டித்து, புதிய தேர்தல் நடத்த கோரியுள்ளார்.

வங்கதேச அரசியல் புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. BNP ஆட்சியில் பொருளாதாரம், ஜனநாயகம் மீட்பு ஆகியவை முக்கிய சவால்களாக உள்ளன. இந்தியாவின் முடிவு எப்படி இருக்கும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: வங்கதேசத்தில் நடந்தது கேலிக்கூத்து! தேர்தல் அல்ல?! ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஷேக் ஹசீனா கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share