டெல்லி உயர்நீதிமன்றம், செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை!
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி உயர்நீதிமன்றம், செங்கோட்டை மற்றும் விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது.
நாளை நாட்டின் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள சூழலில், டெல்லி உயர்நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாளை செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்விற்காகப் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உயர்நீதிமன்ற வளாகம், செங்கோட்டை மற்றும் விமான நிலையத்திற்கு அடுத்தடுத்து மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.
மிரட்டல் செய்தி கிடைத்த உடனேயே சுதாரித்துக் கொண்ட டெல்லி காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF), வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தொழிலாளர் நல வாரியங்களின் 50 ஆண்டு கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் முகமது ஃபர்வேஸ் உறுதி!
நீதிமன்ற வளாகம் மற்றும் விமான நிலையத்தின் ஒவ்வொரு பகுதியும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், சந்தேகத்திற்குரிய எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை. இதனால், இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி (Hoax) என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களும் ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர். இதனிடையே, பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இந்த போலி மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பிய மர்ம நபர்களைக் கண்டறியும் பணியில் டெல்லி காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோவை என்ன பாகிஸ்தானா?... தேசியக்கொடி வழக்கில் தமிழக காவல்துறையை விளாசிய நீதிபதி...!