இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!
2026ம் ஆண்டிற்கான கோடார்ட் விண்வெளி ஆய்வு விருதை இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் வழங்கியது. அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் குவாத்ரா இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
சென்னை: இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்திற்கு 2026-ம் ஆண்டுக்கான கோடார்ட் விண்வெளி ஆய்வு விருதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) வழங்கியுள்ளது. இந்த விருதை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் குவாத்ரா பெற்றுக்கொண்டார்.
சந்திரயான்-3 இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட திட்டமாகும். நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், நிலவின் மேற்பரப்பில் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்கும் திறனை வெற்றிகரமாக நிரூபித்தது. இதன் மூலம் உலக அளவில் நிலவின் தென் துருவத்தில் முதன்முறையாக தரையிறங்கிய நாடு என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்தது.
இந்த சாதனைக்காகவே நாசா 2026-ம் ஆண்டுக்கான மிக உயரிய கோடார்ட் விண்வெளி ஆய்வு விருதை சந்திரயான்-3 திட்டத்துக்கு அறிவித்துள்ளது. இந்த விருது விண்வெளித் துறையில் மிகச் சிறந்த சாதனைகளுக்காக வழங்கப்படும் மிக முக்கியமான கௌரவமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!
விருது பெறும் நிகழ்ச்சியில் பேசிய இந்தியத் தூதர் வினய் குவாத்ரா, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், விண்வெளி ஆய்வில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையே தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
சந்திரயான்-3 திட்டம் இந்தியாவின் விண்வெளித் துறையின் திறனை உலக அரங்கில் மீண்டும் நிரூபித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பெற்ற இந்தியா, இனி வரும் காலங்களில் விண்வெளித் துறையில் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விருது இந்திய விஞ்ஞானிகள், இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் அயராத உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. இந்த சாதனை இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று விண்வெளி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!