மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரயில் திட்டம்! மத்திய ரயில்வே அமைச்சகம் இறுதி ஒப்புதல்!
15 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ நிறுவனத்துடன் இணைக்க மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்து வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லாக, சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் (MRTS) சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் (CMRL) முழுமையாக இணைப்பதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே வாரியம் தனது இறுதி ஒப்புதலை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வந்த நீண்டகாலக் காத்திருப்புக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு கிடைத்துள்ளது.
சென்னையில் ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முதல் முன்மொழிவு அறிக்கையைத் தமிழ்நாடு அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசுக்கு முறைப்படி அனுப்பி வைத்தது. பல்வேறு கட்ட ஆய்வுகள், பேச்சுவார்த்தைகள் மற்றும் சாத்தியக்கூறு சோதனைகளுக்குப் பிறகு, தற்போது மத்திய ரயில்வே அமைச்சகம் இத்திட்டத்திற்குப் பச்சைக் கொடி காட்டி இறுதிக் கையெழுத்திட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்தில் ராகுல் ஓட்டம்! பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் ஆவேசம்!
இந்த வரலாற்று ஒப்பந்தத்தின்படி, தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்கள், வழித்தடங்கள், உள்கட்டமைப்புச் சொத்துக்கள் மற்றும் தினசரி இயக்கம், பராமரிப்பு உரிமைகள் அனைத்தும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்பட உள்ளன. இதன் மூலம் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடம் மெட்ரோவின் தரத்திற்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டு, பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகள், பாதுகாப்பு மற்றும் தடையற்ற இணைப்புச் சேவை ஆகியவை கிடைக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குமரியில் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை! 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை!