×
 

சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிஷம் தான்!! புல்லட் ரயில் திட்டம்! அறிவித்தது மத்திய அரசு!

சென்னையில் இருந்து பெங்களுருவுக்கு வெறும் 73 நிமிட பயணத்தில் செல்லும் வகையிலான நாட்டின் 2வது புல்லட் ரயில் திட்டம் விரைவில் தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.

சென்னை - பெங்களூரு இடையே வெறும் 73 நிமிடங்களில் பயணம் செய்யும் அதிவேக புல்லட் ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இது தென்னிந்தியாவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் கிளவுட் இந்தியா ஏஐ டேட்டா மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தென்னிந்தியாவுக்கான அதிவேக ரயில் திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

இந்தப் புல்லட் ரயில் நெட்வொர்க் அமராவதி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, புனே மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும். இதன் மூலம் இந்தப் பகுதிகள் ஒரே ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலமாக மாறும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு..! காங்கிரஸ் மீண்டும் கலககுரல்..! திமுகவுக்கு காத்திருக்கும் ஷாக்..!

அமைச்சர் கூறிய விவரங்களின்படி, அமராவதி - ஹைதராபாத் இடையேயான பயண நேரம் 70 நிமிடங்களாகக் குறையும். அமராவதி - சென்னை 112 நிமிடங்கள், ஹைதராபாத் - புனே 1 மணி 55 நிமிடங்கள், புனே - மும்பை 48 நிமிடங்கள், சென்னை - பெங்களூரு 73 நிமிடங்கள் மற்றும் ஹைதராபாத் - பெங்களூரு 2 மணி 8 நிமிடங்களில் செல்லும். சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த அதிவேக ரயில் சேவை பயண நேரத்தை வெகுவாகக் குறைத்து, வணிகம், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை பெருமளவில் அதிகரிக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆமதாபாத் - மும்பை இடையேயான 500 கிலோமீட்டர் தூரம் 1 மணி 57 நிமிடங்களில் கடக்கப்படும். இதேபோன்ற அதிசயம் தென் இந்தியாவிலும் நிகழும் என்று அவர் கூறினார்.

மேலும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தென்கடற்கரை ரயில்வே மண்டலம் ஜூன் 1ஆம் தேதி அறிவிக்கப்படும். கொல்கத்தா - சென்னை இடையேயான இரட்டை ரயில் பாதையை நான்கு பாதையாக தரம் உயர்த்தும் பணியும் விரைவில் தொடங்கும் என்றார்.

இந்த அறிவிப்புகள் ரயில்வே துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று ரயில்வே ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். சென்னை - பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயணம் விமான நேரத்துக்கு நிகராகக் குறையும் இந்தத் திட்டம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இயற்கை எழுதிய உங்கள் பெயர்!! நாசாவின் புதிய வசதி! 'Your Name in Landsat'.! புது ட்ரெண்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share