கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!
கேரள சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாகத் தர்மடத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.
கேரளாவில் ஏப்ரல் 9-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தனது சொந்தத் தொகுதியான தர்மடத்தில் 3-வது முறையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
கேரள மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் கண்ணூர் மாவட்டத்தின் தர்மடம் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். சபாநாயகர் ஏ.என். ஷம்சீர், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் இ.பி. ஜெயராஜன், மாவட்டச் செயலாளர் கே.கே. ராகேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தற்போதைய தர்மடம் தொகுதி எம்.எல்.ஏ-வான பினராயி விஜயன், இத்தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். இதற்கு முன்னதாக அவர் குத்துப்பரம்பா (3 முறை), பையனூர் (1 முறை) ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். தர்மடம் தொகுதியில் பினராயி விஜயனை எதிர்த்து, காங்கிரஸ் (UDF) சார்பில் வி.பி. அப்துல் ரஷீத் மற்றும் பாஜக (NDA) சார்பில் கே. ரஞ்சித் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் திருவிழா தொடக்கம்...! 5 மாநிலத் தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு!
புனலூர் காந்தி பவனின் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கைவினைப் பொருட்கள் செய்து ஈட்டிய வருமானத்தில் இருந்து, பினராயி விஜயனுக்கான தேர்தல் வைப்புத் தொகையை வழங்கியுள்ளனர். கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இவர்கள் பினராயி விஜயனுக்கு வைப்புத் தொகை வழங்குவது இது மூன்றாவது முறையாகும்.
தற்போதைய இடதுசாரி ஜனநாயக முன்னனி அரசு, கேரள வரலாற்றில் முதன்முறையாகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த மார்ச் 15-ஆம் தேதி வெளியிட்ட பட்டியலின்படி, மொத்தம் 81 தொகுதிகளில் சிபிஎம் போட்டியிடுகிறது. இதில் 56 பேர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். எஞ்சியுள்ள தொகுதிகள் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (LDF) பிற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!