இந்தியா வருகிறார் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தலைவர்..!! காரணம் இதுதானாம்..!!
டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதி போராட்டம் நடத்த உள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்ற அபிஜித் தீப்கே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி ஜூன் 6-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) என்ற புதிய அரசியல் இயக்கத்தின் தலைவரான அபிஜித் தீப்கே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நீட் (NEET-UG) தேர்வில் ஏற்பட்டுள்ள பெரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவத்தால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதையில் நின்று, அமைதியான முறையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமது குரல் ஒன்றுபட்டால், அரசு நிச்சயம் செவிசாய்க்கும்” என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்த அபிஜித், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆதரவாளர்களை போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!
ஜூன் 6-ம் தேதி சனிக்கிழமை காலையில் டெல்லி விமான நிலையத்திற்கு வரும் தன்னுடன் ஆதரவாளர்கள் இணையுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அதன்பின் அனைவரும் ஜந்தர் மந்தருக்கு சென்று, அமைதியான போராட்டத்திற்கு அனுமதி கோரி நாடாளுமன்ற நோக்கி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றுவரும் அபிஜித் தீப்கேவின் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, இளைஞர்கள் மற்றும் பல்வேறு துறை பிரபலங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அபிஜித் தீப்கேவின் இந்த நடவடிக்கை மாணவர் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைதிப் போராட்டம் மூலம் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்களின் கொந்தளிப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை டூ டெல்லி..! பரபரக்கும் அரசியல்.. முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!