பக்தர்களுக்கு ஸ்வீட் நியூஸ்.. திருப்பதியில் இனி லட்டு வாங்குவது ரொம்ப ஈஸியாம்..!
திருப்பதியில் லட்டு வாங்க நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருமலை திருப்பதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவக் கோவிலாகும். இது ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாளுக்கு (விஷ்ணுவின் அவதாரம்) அர்ப்பணிக்கப்பட்டது. "ஏழுமலையான்" என்ற பெயர், கோவில் அமைந்துள்ள ஏழு மலைகளைக் குறிக்கிறது. இது உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் பணக்கார கோவில்களில் ஒன்றாகும். பெருமாள் இங்கு கலியுகத்தில் பக்தர்களைக் காக்க அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் இலவச தரிசனத்தில் கிட்டத்தட்ட 24 மணி நேரம் மற்றும் அதற்கு மேலும் காத்திருந்து "கோவிந்தா கோவிந்தா" என கோஷமிட்டு பெருமாளை தரிசனம் செய்கின்றனர்.
இதையும் படிங்க: தொண்டரின் கழுத்தில் ஏறி இறங்கிய கார் டயர்.. ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்த புது சிக்கல்..!
சாமி தரிசனம் செய்வதற்கு வரிசையில் காத்திருக்கும் நேரத்தை விட, அங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டினை வாங்குவதற்கும் பக்தர்கள் சில சமயங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. பெரும்பாலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் லட்டு வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில், திருப்பதியில் லட்டு வாங்க பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க கோவில் நிர்வாகம் சார்பில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது லட்டு டோக்கன் பெற QR Code முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பிரத்யேக இயந்திரத்தில் QR Code-ஐ ஸ்கேன் செய்து விரைவாக பணம் செலுத்தி லட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டச் ஸ்கீரினுடன் கூடிய இந்த பிரத்யேக இயந்திரத்தில், தரிசன டிக்கெட் எண், எத்தனை லட்டு வேண்டும், மொபைல் எண்ணை உள்ளீடாக வழங்க வேண்டும். திரையில் தோன்றும் QR Code-ஐ ஸ்கேன் செய்து, லட்டுக்கான பணத்தை யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் முறை மூலம் செலுத்தலாம். பின்னர், அந்த டோக்கனை கவுண்டரில் வழங்கி லட்டுகளை பெற முடியும். இந்த அறிவிப்பால் பக்தர்கள் மிகவும் குஷியடைந்துள்ளனர்.
மேலும், தரிசன டிக்கெட் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்களும் லட்டு பெறும் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!