ஓடும் ஜீப்பில் இருந்தே பாய்ந்த ஆயுதம்! இந்தியாவின் புதிய ‘பவர்’! உள்நாட்டிலேயே உருவான Divyastra MK3 ட்ரோன்!
முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலக்கை குறிவைத்து தாக்கும் தற்கொலை ட்ரோன் (Divyastra MK3) சோதனை இன்று வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை நோக்கிய மற்றொரு முக்கிய முன்னேற்றமாக, முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் ‘Divyastra MK3’ தற்கொலை ட்ரோன் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமான அமைப்பு, லக்னோவில் சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜி ப்ரோபல்ஷன் நிறுவனம் உருவாக்கிய உள்நாட்டு ஜெட் இன்ஜின் மூலம் இந்த ட்ரோன் இயங்குகிறது. திட்டம் தொடங்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள், வெளிநாடுகளில் இருந்து தேவையான உதிரிபாகங்களை இறக்குமதி செய்யாமல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி இதன் தயாரிப்பு மற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை வெற்றி, ஒரு குறிப்பிட்ட ஆயுத அமைப்பை உருவாக்கியதற்கான சாதனை மட்டுமல்ல என்றும், இந்தியாவுக்குள் தேவையான தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறனை பயன்படுத்தி துல்லியமான தாக்குதல் அமைப்பை வடிவமைத்து சோதிக்க முடியும் என்பதை நிரூபிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: செங்கோட்டையில் நடந்த வரலாற்று நிகழ்வு! மெய்சிலிர்க்க வைத்த தருணம்! அமித் ஷா சொன்ன முக்கிய வார்த்தைகள்
பாதுகாப்புத் துறையில் இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு தொழில்நுட்பத்தை அதிகரிக்கும் மத்திய அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ முயற்சிக்கு இதுபோன்ற திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக ஆளில்லா விமானங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் நவீன போர்முறையில் அதிக முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், உள்நாட்டு உற்பத்தித் திறனை வளர்ப்பது பாதுகாப்பு ரீதியாக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் அருகே அமைந்துள்ள சோதனைத் தளத்திலும் பாதுகாப்புத் துறைக்கு மற்றொரு முக்கிய வெற்றி கிடைத்துள்ளது. ஆளில்லா வான்வழி வாகனத்திலிருந்து ஏவப்படும் துல்லிய வழிகாட்டுதல் ஏவுகணையின் இறுதிக்கட்ட மேம்பாட்டு சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு திட்டங்களிலும் கிடைத்துள்ள முன்னேற்றம், ஆளில்லா தொழில்நுட்பம் மற்றும் துல்லியமான பாதுகாப்பு அமைப்புகளில் இந்தியாவின் உள்நாட்டு திறனை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடர் வெற்றிகளுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்பு முயற்சிகளுக்கு இந்த சோதனைகள் புதிய வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒகேனக்கல்லில் திடீர் வெள்ளம்! 8,000-ல் இருந்து 12,500 கனஅடியாக எகிறிய நீர்வரத்து! பரிசல் தடை நீட்டிப்பு!