கல்வியாளரும், முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல் மறைவு..!! கல்வித்துறைக்கு பெரும் இழப்பு!!
அவரது மகன் சதேஜ் பாட்டீல் மகாராஷ்டிர அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் காங்கிரஸ் தலைவர் ஆவார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் தனது 90வது வயதில் காலமானார் முன்னாள் ஆளுநர் டாக்டர் டி.ஒய். பாட்டீல். வயது முதிர்வு மற்றும் நீண்டகால உடல்நலக் குறைபாட்டால் இன்று அவரது இல்லத்திலேயே உயிரிழந்தார். 1935 அக்டோபர் 22-ஆம் தேதி கோலாப்பூரில் பிறந்த ஞானதேவ் யஷ்வந்த்ராவ் பாட்டீல், கல்வி, சமூக சேவை மற்றும் பொது வாழ்க்கையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.
டி.ஒய். பாட்டீல் குழுமத்தின் நிறுவனராக அறியப்படும் அவர், மும்பை, நவி மும்பை, புனே, கோலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் 150-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களையும், பல நிகர்நிலை பல்கலைக்கழகங்களையும் உருவாக்கினார். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, பல் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தரமான கல்வியை விரிவுபடுத்தியதோடு, சுகாதார நிறுவனங்களையும் நிறுவினார். 1991-இல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், கல்வித்துறையின் தொலைநோக்குப் பார்வை கொண்ட சிற்பியாகக் கருதப்பட்டார்.
அரசியல் வாழ்க்கையில் மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராகத் தொடங்கிய பாட்டீல், காங்கிரஸ் கட்சியுடன் நீண்டகாலம் தொடர்புடையவராக இருந்தார். பின்னர் 2018-இல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2009 முதல் 2013 வரை திரிபுரா ஆளுநராகவும், 2013 முதல் 2014 வரை பீகார் ஆளுநராகவும் பணியாற்றினார். 2014-இல் மேற்கு வங்க ஆளுநராகவும் சிறிது காலம் கூடுதல் பொறுப்பு வகித்தார். அவரது மகன் சதேஜ் பாட்டீல் மகாராஷ்டிர அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் காங்கிரஸ் தலைவர் ஆவார்.
இதையும் படிங்க: 'ஒரு இசை சகாப்தம் முடிந்தது'... எஸ். ஜானகி மறைவுக்கு சினிமா முதல் அரசியல் தலைவர்கள் இரங்கல்கள்!
பாட்டீலின் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கல்வி, சமூக சேவை மற்றும் பொது வாழ்க்கைக்கு இது பெரும் இழப்பு என்றும், அவரது பணிகள் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் குறிப்பிட்டனர். திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா அவரை தலைசிறந்த கல்வியாளர், தொலைநோக்கு நிறுவனங்களை உருவாக்கியவர் மற்றும் மதிக்கப்படும் பொது ஆளுமை எனப் பாராட்டினார்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் நீடித்த பாரம்பரியமாக நிலைத்திருக்கும் என அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாட்டீலின் மறைவால் கல்வித்துறை ஒரு முக்கிய தலைவனை இழந்துள்ளது.
இதையும் படிங்க: பாராளுமன்றத்தில் மீண்டும் அமளி! அமித் ஷா ராஜினாமா கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்! லோக்சபா ஒத்திவைப்பு!