×
 

மகாராஷ்டிரா தேர்தலில் மேட்ச் பிக்சிங்? முட்டி மோதிக் கொள்ளும் ராகுல்காந்தி Vs தேர்தல் ஆணையம்..

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மேட்ச் பிக்சிங்' செய்யப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதுவரை ஏன் முறையாக புகார் அளிக்கவில்லை? என தலைமை தேர்தல் கமிஷன் கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் 2024 நவம்பரில், 288 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய மஹாயுதி கூட்டணி, 235 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 50க்கும் குறைவான இடங்களையே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை. தோல்வியடைந்த காங்கிரஸ் மாபெரும் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது. 

வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணிக்கைக்கும், பதிவான ஓட்டுகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: மோடி அரசின் 11 ஆண்டுகால சேவை.. எந்த மாற்றமும் இல்லை.. ராகுல் காந்தி கடும் தாக்கு..!

இதையடுத்து, காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தேர்தல் நடைமுறை, வாக்காளர் பட்டியல், பதிவான ஓட்டுகள் பற்றி தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதே குற்றச்சாட்டை பீகாரில் ராகுல் காந்தி மீண்டும் பதிவு செய்தார். 

மகாராஷ்டிரா தேர்தலில் நடந்தது போலவே, பீகார் தேர்தலிலும் முறைகேட்டை செயல்படுத்த பாஜ திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில், முதலில் தேர்தல் அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடத்தினர். பின் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்தனர். போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தனர். ஓட்டுபதிவிலும் முறைகேடு நடந்தது. பின் அவர்களுக்கு சாதகமான தொகுதிகளில் கூடுதல் ஓட்டுப்பதிவை காண்பித்து பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என, ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு என காங்கிரஸ் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு 2024ம் ஆண்டே உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.

அது குறித்த விவரங்கள் அனைத்தும் தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் உள்ளது. அது மிகவும் வெளிப்படை தன்மையானது. தவறான தகவல்களை பரப்புவதின் மூலம் சட்டத்தை அவமதிப்பதோடு, தேர்தல் கமிஷனின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கப்படுகிறது.

தேர்தலில் தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை என்பதற்காக, தேர்தல் கமிஷனின் செயல்பாட்டை களங்கப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என தேர்தல் கமிஷன் கண்டனத்தை பதிவு செய்தது. இந்நிலையில், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் குறித்து, 'மேட்ச் பிக்சிங் மஹாராஷ்டிரா' என்ற பெயரில், ஆங்கில நாளிதழில் ராகுல்காந்தி கட்டுரை ஒன்றை சமீபத்தில் எழுதி இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், தலைமை தேர்தல் கமிஷன் தரப்பில் அளித்த விளக்கம்: காங்கிரசும், குறிப்பாக ராகுல் காந்தியும் தேர்தல் கமிஷனைப் பற்றி பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் கமிஷன் உரிய ஆவணங்களை கேட்டு ஆஜராகும்படி கூறினால், அவர்கள் ஒருபோதும் ஆஜராக மாட்டர். மஹாராஷ்டிரா தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டிய நிலையில், இதுபற்றி கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காங்கிரசுக்கு தலைமை தேர்தல் கமிஷன் சார்பில் விளக்கமாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

எனினும், இந்த விவகாரத்தை ராகுல் சர்ச்சையாக்கி வருகிறார். இது தீவிரமான பிரச்னை என்றால், ராகுல் ஏன் இதுவரை முறையாக எங்களிடம் புகார் அளிக்கவில்லை? தேர்தல் கமிஷனை சந்திக்க ஏன் நேரம் கேட்கவில்லை? இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முகத்துல அழுக்கை வச்சுக்கிட்டு கண்ணாடியை கழுவாதீங்க.. ராகுல்காந்தியை வெளுத்த தேவேந்திர பட்னாவிஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share