×
 

பிரதமரை பயங்கரவாதி என்று கூறலாமா? கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பிரதமர் மோடியை பயங்கரவாதி என்று குறிப்பிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மேற்கு வங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நோட்டீஸ் அனுப்பிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியைப் பயங்கரவாதி என்று விமர்சித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். அப்போது, பிரதமர் மோடியைக் குறிப்பிட்ட சில வார்த்தைகளால் விமர்சித்த நிலையில், அவர் பிரதமரைப் "பயங்கரவாதி" (Terrorist) என்று அழைத்ததாக பாஜக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

பாஜகவின் புகாரைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் இன்று கார்கேவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் தனது பேச்சு குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தனிநபர் தாக்குதல் மற்றும் கண்ணியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளின் (Model Code of Conduct) கீழ் விதிமீறலாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் பரபரப்பு! பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

வாக்குப்பதிவிற்குச் சில மணி நேரங்களே உள்ள நிலையில், தேசிய அளவில் இரு முக்கியக் கட்சிகளிடையே இந்த விவகாரம் அனல் பறக்கும் விவாதமாக மாறியுள்ளது. நாட்டின் பிரதமரை இத்தகைய தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சிப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமதிப்பதாகும் என பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கார்கேவின் பேச்சு தவறாகச் சித்தரிக்கப்படுவதாகவும், ஆளுங்கட்சியின் அழுத்தத்தால் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கே அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், அவர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் தடை விதிக்கப்படலாம் அல்லது அவர் மீது வழக்குப் பதிவு செய்யத் தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தேசியத் தலைவர்கள் இடையிலான இந்த வார்த்தைப் போர் வாக்காளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திமுகவின் இரு சாதனைகள்! குடும்ப சொத்து உயர்வு, கடனில் மூழ்கிய தமிழகம்! கோவையில் பிரதமர் மோடி ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share