×
 

மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

பின்னர் 2004 முதல் 2016 வரை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.எம். சுதர்சன நாச்சியப்பன் (78) இன்று (செப்டம்பர் 17) சிவகங்கையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், அதிகாலையில் உறக்கத்திலேயே காலமானார்.

அவரது மறைவு செய்தி அறிந்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், செப்டம்பர் 29, 1947 அன்று பிறந்தார். எம்.ஏ., பி.எல். பட்டங்களைப் பெற்ற இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றார். 

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்பு படித்திருந்தார். காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1969 முதலே கட்சியில் இணைந்து இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றினார். சிங்கம்புனாரி இளைஞர் காங்கிரஸ் தலைவர், இராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். 

இதையும் படிங்க: #BREAKING: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்: திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்!

1986-91 காலகட்டத்தில் சிவகங்கை பஞ்சாயத்து ஒன்றியத் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றினார்.1999 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு, அப்போதைய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இது அவரது அரசியல் வாழ்வில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. பின்னர் 2004 முதல் 2016 வரை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

அப்போது தலைமைக் கொறடாவாகவும் பணியாற்றினார். 2000-ல் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறைத் தலைவர், 2002-ல் மாநில துணைத் தலைவர், 2003-ல் நாடாளுமன்றக் கொறடா, 2004-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் போன்ற பொறுப்புகளையும் ஏற்றிருந்தார்.2013 ஜூன் முதல் 2014 மே வரை மன்மோகன் சிங் அமைச்சரவையில் வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். 

நாடாளுமன்ற நிலைக்குழுக்களில், குறிப்பாகப் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை நிலைக்குழு தலைவராகப் பணியாற்றி முக்கிய பங்காற்றினார். இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர்கள் உரிமைகள், கச்சத்தீவு உள்ளிட்ட விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இரண்டு முறை உரையாற்றியவர். 

மனித உரிமைகள், சட்டம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் விசுவாசமாக இருந்தார். மனைவி தேவகி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் உள்ளனர். அவரது மறைவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

இதையும் படிங்க: கொளத்தூர் MLA V.S. பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? மருத்துவமனை அறிக்கை..! சற்று ஆறுதல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share