×
 

மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்..!! குஷியில் பெண்கள்..!!

ஜூன் 1ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை தோற்கடித்து 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, சுவேந்து அதிகாரியை முதலமைச்சராக நியமித்துள்ளது. இந்த மாற்றம் மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

சுவேந்து அதிகாரி முதலமைச்சராக பதவியேற்ற சில நாட்களிலேயே அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் மிக முக்கியமானது, பெண்களுக்கான நலத்திட்டங்கள். ‘அன்னபூர்ணா’ திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கவும், அரசுப் பேருந்துகளில் இலவச பயண வசதி அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாநில போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஜூன் 1 முதல் மேற்கு வங்காளத்தில் இயங்கும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இந்தத் திட்டம் வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் மற்றும் முதிய பெண்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது. தினசரி பயணச் செலவு குறையும் என்பதால் குடும்பப் பொருளாதாரத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஜூன் 15ம் தேதி முதல்.. கேரளாவில் இலவச பேருந்து பயணம்..!! முதல்வர் சதீசன் அறிவிப்பு..!! குஷியில் பெண்கள்..!!

இத்திட்டத்தைச் செயல்படுத்த, தகுதியான பெண்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டையில் QR குறியீடு, புகைப்படம் மற்றும் பயனாளி விவரங்கள் இடம்பெறும். கார்டுகள் வழங்கப்படும் வரை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் போன்ற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணங்களைக் காட்டி இலவச பயணத்தைப் பயன்படுத்தலாம். பேருந்து நடத்துநர்கள் அடையாளத்தை சரிபார்த்த பின்னர் ‘பூஜ்ஜிய மதிப்பு டிக்கெட்’ வழங்குவார்கள். 

அரசு அதிகாரிகள் கூறுகையில், “இந்தத் திட்டம் பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். குறிப்பாக கிராமப்புறப் பெண்களும் நகர்ப்புறப் பெண்களும் சமமாக பயனடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றனர். பாஜக தலைவர்கள் இந்த அறிவிப்பை “பெண் நலன் சார்ந்த அரசியல்” என்று வர்ணித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மேற்கு வங்காள அரசியலில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அரசு மேலும் பல திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: குழம்பிய மக்கள்..! கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தமா..? தமிழக அரசு கொடுத்த விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share