×
 

வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

சந்தையில் போதுமான விநியோகத்தை உறுதிப்படுத்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

நாடு முழுவதும் சமையலறைக்கு இன்றியமையாத வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருவதால், பொதுமக்களின் அன்றாட செலவு அதிகரித்துள்ளது. அகில இந்திய சராசரி சில்லறை விலை கிலோவுக்கு சுமார் ரூ.42 முதல் ரூ.44 வரை உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 45 முதல் 59 சதவீதம் வரை அதிகம். 

டெல்லியில் கிலோ ரூ.55 முதல் ரூ.65 வரை, சென்னையில் ரூ.58 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. மகாராஷ்டிராவின் நாசிக் உள்ளிட்ட முக்கிய உற்பத்தி மையங்களில் வரத்து குறைவு, பருவகால மாற்றங்கள் மற்றும் சேமிப்பு இழப்புகள் ஆகியவை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் விலையைக் கட்டுப்படுத்தவும், சந்தையில் போதுமான விநியோகத்தை உறுதிப்படுத்தவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

‘கந்தா எக்ஸ்பிரஸ்’ என அழைக்கப்படும் சிறப்பு சரக்கு ரெயில்கள் மூலம் நாசிக்கில் உள்ள அரசு கையிருப்பு மையங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை, மதுரை, டெல்லி, எர்ணாகுளம் (கொச்சி) மற்றும் கவுகாத்தி ஆகிய ஐந்து முக்கிய நுகர்வு மையங்களுக்கு இந்த ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. டெல்லிக்கு சுமார் 800 முதல் 840 டன் வரை ஏற்றப்பட்ட ரெயில் இன்று வரவுள்ளது. பிற நகரங்களுக்கும் புதன் கிழமைக்குள் வந்து சேர வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

இந்த வெங்காயம் நேரடியாக மொத்த விற்பனை சந்தைகளிலும், கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும், NAFED மற்றும் NCCF அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும். நுகர்வோருக்கு கிலோ ரூ.35 என்ற மலிவு விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிச்சந்தையில் செயற்கை பற்றாக்குறை உருவாக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, நியாயமான விலையில் பொருள் கிடைக்கும். தேவைக்கேற்ப மேலும் பல நகரங்களுக்கும் இந்த சேவை விரிவாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கந்தா எக்ஸ்பிரஸ் திட்டம் 2024-25 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போது 14 ரெயில் ரேக்குகள் மூலம் சுமார் 12,000 டன் அனுப்பப்பட்டது. 2025-26 ஆம் ஆண்டில் இது பெரிதும் விரிவடைந்து 86 ரேக்குகள் மூலம் 88,000 டன் 16 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போதைய நடவடிக்கை பருவகால விலை ஏற்றத்தை சமாளிக்கவும், விழாக்கால தேவையை பூர்த்தி செய்யவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு கையிருப்பு போதுமானதாக உள்ளதால், விலை நிலைத்தன்மை விரைவில் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share