டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொள்முதலில் அரசுக்கு சுமார் 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கூறியுள்ளன. இந்த புகாரை மையப்படுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் 2021-2023 காலத்தில் TANGEDCO சார்பில் 10 டெண்டர்கள் மூலம் சுமார் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதுடன் தொடர்புடையது. மொத்த டெண்டர் மதிப்பு சுமார் 1,182 கோடி ரூபாயாகும். 500 kVA திறன் கொண்ட மின்மாற்றியின் சந்தை மதிப்பு சுமார் 7.89 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், டெண்டரில் அதன் விலை 12.49 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த 58.3 சதவீத விலை உயர்வு காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு அதிக லாபம் கிடைத்ததாகவும், அதனால் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கணக்கிடப்பட்டது.
இந்த முறைகேடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த வி. செந்தில் பாலாஜியின் பதவிக்காலத்தில் நடைபெற்றதாக புகார் சுட்டிக்காட்டப்பட்டது. 2023 ஜூலை 6 அன்று அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC)க்கு புகார் அளித்தது. அதில், FIR பதிவு செய்து, உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. இதே விவகாரத்தில் அதிமுக சார்பில், அதன் வழக்கறிஞர் அணியின் துணைச் செயலாளர் ஈ. சரவணன் உள்ளிட்டோரும் தனித்தனியாக பொது நலன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: சொத்து விவரங்கள்..! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!
இதனிடையே இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறப்போர் இயக்கம் மற்றும் அதிமுக சார்பில் தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களில் ஆவணங்களை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறையும், தமிழக அரசும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்த சமூகத்தில் தான் குறை..! திருநங்கை மறுவாழ்வு திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!