ரேடாரில் சிக்காத ஸ்டெல்த் போர் விமானம்! களமிறங்கியது இந்தியா! 3 தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர்!!
நாட்டின் மிகப் பெரிய, 'ஸ்டெல்த்' ரக போர் விமானத்தை வடிவமைக்கும் திட்டத்தை ராணுவ அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக முன்னெடுத்தது. தனியார் பங்களிப்புடன் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரிப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ ரக போர் விமான திட்டத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக முன்னெடுத்துள்ளது. ராணுவ அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், இந்திய விமானப்படையின் எதிர்கால திறனை முழுமையாக மாற்றக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
தற்போது இந்திய விமானப்படையில் பயன்பாட்டில் உள்ள சுகோய் மற்றும் தேஜஸ் போன்ற போர் விமானங்கள் நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்தைச் சேர்ந்தவை. ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே ரேடாரில் எளிதில் சிக்காத ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. இதனால், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ரக போர் விமானங்களை உள்நாட்டிலேயே உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளது.
இதற்காக ‘ஏ.எம்.சி.ஏ’ எனப்படும் ‘அட்வான்ஸ்டு மல்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு, நவீன சென்சார்கள், நீண்ட தூர தாக்குதல் திறன் மற்றும் ரேடார்களில் எளிதில் கண்டறிய முடியாத ஸ்டெல்த் தொழில்நுட்பம் இடம்பெற உள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!
இந்த திட்டத்திற்காக டாட்டா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ், எல் அண்டு டி மற்றும் பாரத் போர்ஜ் உள்ளிட்ட முக்கிய தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் எல் அண்டு டி நிறுவனம், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தில் பங்கேற்க முன்வந்துள்ளது. அதேபோல் பாரத் போர்ஜ் நிறுவனம், பி.இ.எம்.எல் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த திட்டத்தில் மிகவும் கவனம் ஈர்த்த விஷயம், இந்தியாவின் முக்கிய விமான தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) டெண்டர் நடைமுறையில் இடம்பெறவில்லை என்ற தகவலாகும். இது பாதுகாப்புத்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரிக்கப்படுகிறதா என்ற விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
மூன்று நிறுவனங்களும் டெண்டர் ஆவணங்களை சமர்ப்பித்த பின், இறுதி தேர்வு நடைமுறை தொடங்கும் என்று கூறப்படுகிறது. எந்த நிறுவனம் இந்தியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கப் போகிறது என்பது அடுத்த 4 முதல் 5 மாதங்களில் தெளிவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!