×
 

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கின்னஸ் சாதனை!! இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை!! 2.5 லட்சம் பேர் உறுதியேற்பு!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாடு 2026-இல் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது என்ற உறுதிமொழியை 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எடுத்துக் கொண்டது கின்னஸ் உலக சாதனையாக அமைந்துள்ளது.

டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தியா AI இம்பாக்ட் சம்மிட் 2026 மாநாட்டில் இந்தியா ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளது. 24 மணி நேரத்தில் 2,50,946 பேர் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்புடனும் நெறிமுறையுடனும் பயன்படுத்துவது என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டது கின்னஸ் உலக சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்தியா AI மிஷன் மற்றும் இண்டல் இந்தியா இணைந்து பிப்ரவரி 16 மற்றும் 17 தேதிகளில் நாடு தழுவிய AI பொறுப்பு உறுதிமொழி இயக்கத்தை தொடங்கியது.

aipledge.indiaai.gov.in என்ற இணையதளம் வழியாக பொது மக்கள், குறிப்பாக மாணவர்கள், AI-யை நெறிமுறைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையுடன், உள்ளடக்கிய வகையில் பயன்படுத்துவதாக உறுதி எடுத்தனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்தித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை! ஏஐ வளர்ச்சி குறித்து ஆலோசனை!! டெல்லி மாநாட்டில் ருசிகரம்!

ஆரம்பத்தில் 5,000 பேர் என்ற இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று எதிர்பார்ப்பை தாண்டியுள்ளனர்.

இந்த சாதனை பாரத மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டாளர் பிரவீன் படேல் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. உறுதிமொழி எடுத்தவர்களுக்கு டிஜிட்டல் பேட்ஜ் மற்றும் AI கற்றல் பாதைகளுக்கான அணுகல் வழங்கப்பட்டது. 

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் இளைஞர்களை ஈடுபடுத்த முடிந்ததாகவும், கல்லூரிகள், ஆசிரியர்கள், மாணவர்களை அணுகி AI-யை சமூக நன்மைக்கான கருவியாக பயன்படுத்த வேண்டும் என்று ஊக்குவித்ததாகவும் பாராட்டு தெரிவித்தார்.

இந்த மாநாடு பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்முறையாக தெற்குலகில் (Global South) நடைபெறும் இந்த உச்சிமாநாட்டை பிரதமர் மோடி பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 45 நாடுகளின் பிரதிநிதிகள், உலக தொழில்நுட்ப தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னோடி!! சிறந்த எதிர்காலம் உருவாகும்!! பிரதமர் மோடி நம்பிக்கை குரல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share