'ஆப்ரேஷன் சைஹாக் 5.0' 48 மணி நேரத்தில் 916 சைபர் குற்றவாளிகள் கைது! டெல்லி போலீஸ் அதிரடி
நம் நாட்டில் அதிகரித்து வரும், 'ஆன்லைன்' பண மோசடிகளை தடுக்கும் வகையில், நாடு தழுவிய அளவில் டில்லி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் 48 மணி நேரத்திற்குள் 916 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஆன்லைன் பண மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த டெல்லி போலீசார் நாடு தழுவிய அளவில் மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கையில் 916 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 16 முதல் 18ஆம் தேதி வரை 48 மணி நேரம் நடைபெற்ற இந்த அதிரடி சோதனை, சைபர் குற்ற உலகிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'ஆப்ரேஷன் சைஹாக் 5.0' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்தனர். இதற்காக 2,500க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய 715 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
விசாரணையில், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தள செயலிகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி சுமார் 700 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. பகுதிநேர வேலை வாய்ப்பு, கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் அதிக லாபம் தரும் திட்டங்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மக்களிடம் பணம் பறிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவனங்களின் உயரதிகாரிகளின் குரலை போல உருவாக்கி, ஊழியர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த சம்பவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போலி இணைப்புகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் மக்களின் செல்போன்களை ஹேக் செய்து, வங்கி கணக்குகளில் இருந்த பணத்தையும் திருடியுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 7,189 பேர் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டனர். 691 பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் மோசடியில் தொடர்புடைய இரண்டு நைஜீரியர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டனர்.
மோசடி பணத்தை மறைக்க பயன்படுத்தப்பட்ட 600க்கும் மேற்பட்ட போலி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் 3,600க்கும் அதிகமான நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சோதனையில் 757 மொபைல் போன்கள், 105 லேப்டாப்கள் உள்ளிட்ட ஏராளமான மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆன்லைன் முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் அறிமுகமில்லாத இணைப்புகள் தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கடவுள் தேசத்தை உலுக்கும் ஷிகெல்லா தொற்று! 120ஆக அதிகரித்தது பாதித்தவர்கள் எண்ணிக்கை! ஹைஅலர்ட்!