உலகமே தடுமாறினாலும் இந்தியா அசராது! 7% வளர்ச்சி தொடரும் என நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!
சர்வதேச சந்தையில் உரங்களின் விலை அதிகரித்தபோதிலும், விவசாயிகள் மீது கூடுதல் சுமை ஏற்படாமல் இருக்க மானிய நடவடிக்கைகள் மூலம் உர விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
சிகாகோ: உலக அளவில் பல்வேறு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் நீடித்து வரும் நிலையிலும், 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக சிகாகோ சென்றுள்ள நிர்மலா சீதாராமன், அங்கு இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார். அப்போது உலக நாடுகளில் நிலவும் மோதல்கள் மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அவர் விளக்கினார்.
ரஷியா-உக்ரைன் போர், அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் உள்ளிட்ட புவிசார் அரசியல் பிரச்சினைகள் சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட இடையூறுகளால் கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உரங்களின் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு வரப்போகும் கனடா முதலீடு? நிதி நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் பெரிய ஆஃபர்!
இத்தகைய சூழ்நிலையிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்ந்து நீடித்து வருவதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார். முக்கியப் பொருட்களின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டபோது, மாற்று வழிகளை பயன்படுத்தி தேவையான பொருட்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் உரங்களின் விலை அதிகரித்தபோதிலும், விவசாயிகள் மீது கூடுதல் சுமை ஏற்படாமல் இருக்க மானிய நடவடிக்கைகள் மூலம் உர விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். பல்வேறு நாடுகளுடன் நேரடி இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதனிடையே, இந்தியாவின் நிதி நிலைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில் கடன் அளவை குறைக்கும் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். 2030-ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த கடன் அளவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
உலகளாவிய நெருக்கடிகள் தொடர்ந்தாலும், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும் முயற்சிகள் மூலம் இந்தியா தனது வளர்ச்சிப் பாதையை தக்க வைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையை நிதியமைச்சரின் கருத்துகள் வெளிப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்? நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவிப்பு!