இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம்! 3 போர்க்கப்பல்கள் அர்ப்பணிப்பு! அசர வைக்கும் தொழில்நுட்பம்! மிரட்டல்!
இந்தியாவில் 75 சதவீதத்திற்கும் மேல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 3 புதிய அதிநவீன போர்க்கப்பல்கள் இன்று இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.
இந்தியக் கடற்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும் வகையில், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 3 புதிய அதிநவீன போர்க்கப்பல்கள் இன்று அதிகாரப்பூர்வமாக கடற்படையில் இணைக்கப்பட்டன. கொல்கத்தாவில் உள்ள சியாமபிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மத்திய அரசின் ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் முக்கிய சாதனையாக இந்த கப்பல்கள் கருதப்படுகின்றன. 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல்கள், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றன.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பிரிவு வடிவமைத்த இந்த கப்பல்களை, கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனம் கட்டியெழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: எண்ணெய் கப்பலுக்குள் ஏவுகணை! கொச்சி துறைமுகமே அழியும்! உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய கடற்படை வீரர்கள்!
கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் துனகிரி, நவீன ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்ட போர்க்கப்பலாகும். எதிரி நாடுகளின் ரேடார் கண்காணிப்பில் எளிதில் சிக்காத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டுள்ளதால், கடல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஐஎன்எஸ் அக்ராய் என்ற கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து எதிர்கொள்ளும் திறன் கொண்டதாகும். குறிப்பாக கடலோர மற்றும் குறைந்த ஆழம் கொண்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இது உதவும். மேம்பட்ட சோனார் கருவிகள் மற்றும் டார்பிடோ ஆயுதங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
மூன்றாவது கப்பலான ஐஎன்எஸ் சன்ஷோதக், கடலாய்வு மற்றும் வரைபடத் தயாரிப்பு பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. கடலின் அடிப்பகுதி அமைப்புகள் மற்றும் ஆழ்கடல் தகவல்களை துல்லியமாக சேகரிக்கும் நவீன கருவிகளுடன் இது செயல்படும்.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த மூன்று நவீன கப்பல்களின் இணைப்பு இந்தியக் கடற்படையின் திறனை பல மடங்கு உயர்த்தும் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: தரை, வான், கடல்வழி பாதுகாப்பு அடிபொலி!! 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி! இந்தியா அசத்தல்!