S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!
ரஷ்யா அனுப்பி வைத்த 4வது எஸ் 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது.
இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்ட நான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியா வந்தடைந்துள்ளது. உலகின் மிக சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் இந்த எஸ்-400, இந்திய பாதுகாப்பு துறையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
ரஷ்யா தயாரித்துள்ள எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, நீண்ட தூரத்தில் இருந்து வரும் ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை கண்டறிந்து துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. சுமார் 600 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளை கண்காணிக்கக்கூடிய இந்த அமைப்பு, 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அச்சுறுத்தல்களையும் இடைமறித்து அழிக்க முடியும்.
இந்த திறன்களை கருத்தில் கொண்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியா ரஷ்யாவுடன் ஐந்து எஸ்-400 அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதற்கான முழுத் தொகையையும் இந்தியா ஏற்கனவே செலுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழக ஆசிரியரை பாராட்டிய பிரதமர் மோடி!! பள்ளிகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்கு!! யார் இந்த கிரிஜா அம்மா?!
இதுவரை மூன்று எஸ்-400 அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு, சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. சமீப ஆண்டுகளில் நடந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது இந்த அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக எஞ்சிய இரண்டு அமைப்புகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், நான்காவது எஸ்-400 அமைப்பு இந்தியா வந்தடைந்துள்ளதால், அது விரைவில் முக்கிய எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், வெளிநாட்டு சார்பை குறைக்கும் நோக்கில் இந்தியா உள்நாட்டிலேயே அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. "ப்ராஜெக்ட் குஷா" எனப்படும் இந்த திட்டத்தின் மூலம், எதிர்காலத்தில் இந்தியாவே தனது தேவைக்கான உயர்தர வான் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.
நான்காவது எஸ்-400 இந்தியா வந்தடைந்திருப்பது, நாட்டின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முப்படை தலைமை தளபதியாக தமிழர் ராஜா சுப்பிரமணியன் பதவியேற்பு!! இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதி!