அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!
ஒடிசாவின் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து, அணு ஆயுதங்களை ஏந்தி செல்லக்கூடிய அக்னி-3 ஏவுகணை இன்று (பிப்ரவரி 6, 2026) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் விதமாக, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய அக்னி-3 (Agni-III) ஏவுகணை இன்று ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் ஸ்டாட்ரஜிக் ஃபோர்சஸ் கமாண்ட் (Strategic Forces Command) சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சிச் சோதனை, ஏவுகணையின் நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.
அக்னி-3 ஏவுகணை 3,000 முதல் 3,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இது இரண்டு நிலைகளைக் கொண்ட, திட எரிபொருளால் இயங்கக்கூடிய ஏவுகணையாகும். 1.5 டன் வரையிலான அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய வல்லமை படைத்தது. சுமார் 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ஏவுகணை, எதிரிகளின் இலக்குகளை 40 மீட்டருக்கும் குறைவான வட்டப் பிழை இடைவெளியில் மிகத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.
இதையும் படிங்க: #BREAKING: மருந்து கொள்முதலில் முறைகேடா? வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!
சோதனை வெற்றி: இன்று மதியம் நடைபெற்ற இந்தச் சோதனையில், ஏவுகணை முன்கூட்டியேத் தீர்மானிக்கப்பட்டப் பாதையில் பயணித்து, வங்காள விரிகுடாவில் இருந்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது. ரேடார்கள் மற்றும் டெலிமெட்ரி கருவிகள் மூலம் இதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, அனைத்துத் தொழில்நுட்ப அளவுகோல்களும் எட்டப்பட்டதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நம்பகமானக் குறைந்தபட்சத் தடுப்பு கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக அக்னி-3 விளங்குகிறது. ஏற்கனவே இந்திய ராணுவத்தில் 2011-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் இந்த ஏவுகணை, அவ்வப்போது இது போன்றப் பயிற்சிச் சோதனைகள் மூலம் அதன் தயார்நிலை உறுதி செய்யப்படுகிறது. இன்றைய வெற்றியானது நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியாவின் தற்சார்பு நிலையை மீண்டும் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
இதையும் படிங்க: ஒடிசா: சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன..!! தப்பிய பயணிகள்..!!