இனி மிஸ்ஸே ஆகாது..!! ரயிலில் பெட்ஷீட் திருட்டுக்கு டாட்..!! இந்திய ரயில்வேயின் பக்கா பிளான்..!!
இந்த அமைப்பு பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியன் ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணிகளின் வசதிக்காக வழங்கப்படும் பெட்ஷீட்கள், தலையணைகள், போர்வைகள் உள்ளிட்ட படுக்கைப் பொருட்கள் பெருமளவில் திருட்டுக்குப் பலியாகின்றன. இந்தப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், ரயில்வே நிர்வாகம் இப்போது அதிரடி திட்டங்களை அமல்படுத்தி தடுக்க முனைந்துள்ளது.
2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 1.27 கோடி படுக்கைப் பொருட்கள் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இழப்பு ரயில்வேக்கு பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துவதோடு, பயணிகளின் அடிப்படை வசதியையும் பாதிக்கிறது. பொருட்களை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்கள் இழப்புக்கு பொறுப்பேற்றாலும், அவை பணியில் இருக்கும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து இழப்பை ஈடுகட்டுகின்றன. இது ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தத் திருட்டை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் வடமேற்கு ரயில்வே டிவிஷன் முன்னோடியாக டிஜிட்டல் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. போர்வை வழங்குவதில் இருந்து அதை மீண்டும் சேகரிப்பது வரை ஒவ்வொரு நடவடிக்கையும் சிறப்பு ஆப் மூலம் பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனி டிஜிட்டல் ரெக்கார்டுகள் பராமரிக்கப்படுவதால், கையேடு பதிவுகளை நம்பாமல் துல்லியமாக கண்காணிக்க முடிகிறது. இந்த அமைப்பு பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நிலநடுக்கத்தால் குலுங்கிய நியூசிலாந்து..!! ரிக்டர் அளவு 6.3-ஆக பதிவு..!! சுனாமி எச்சரிக்கை..!!
மேலும், ஒவ்வொரு படுக்கை விரிப்பு மற்றும் போர்வைக்கும் QR குறியீடுகள் அச்சிடப்பட்டு, வழங்கல், சேகரிப்பு, லாண்டரி அனுப்பல் உள்ளிட்ட அனைத்து கட்டங்களிலும் ஸ்கேன் செய்யும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் எந்தப் பொருள் எங்கே காணாமல் போகிறது என்பதை எளிதில் கண்டறியலாம். பல டிவிஷன்களில் ஏற்கனவே ரயில் பெட்டிகளுக்குள் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் பணிகளில் சிறப்பு கண்காணிப்பு வலுப்பெற்றுள்ளது. ஸ்டேஷன்கள் மற்றும் பணிமனைகளில் அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. பொறுப்பு யாருடையது எனத் தெரியவரும் இடங்களில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு போர்வைகளை திருப்பித் தருமாறு அறிவுறுத்தவும், ஊழியர்கள் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராஞ்சி டிவிஷனில் இன்னும் ஒருபடி மேலே சென்று, பயணிகள் இறங்கும் நிலையத்துக்கு அரை மணி நேரம் முன்பாகவே போர்வைகளை ஒப்படைக்க வேண்டும் என்று அச்சிட்டு வழங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் இரவு நேரங்களில் திடீர் சோதனைகளை அதிகரித்துள்ளனர். ரயில்வே பொருட்களைத் திருடுவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் படுக்கைப் பொருட்கள் திருட்டு கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் ஒத்துழைப்பும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
இதையும் படிங்க: அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க உடன் நிற்போம்! சபரிவர்மன் இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி!