×
 

ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அங்கிருக்கும் இந்திய மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இருநாடுகளும் மாறி மாறி வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. போரை நிறுத்திவிட்டு சரணடையுமாறு அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தும், ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. மாறாக, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தே தீருவோம் என்று அந்நாட்டின் மூத்த மத தலைவர் கமேனி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இருநாடுகளும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே, ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தியது. வேலை மற்றும் கல்விக்காக ஈரானில் மட்டும் சுமார் 10,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

அவர்களில் 6,000 பேர் மாணவர்கள் ஆவர். பாதுகாப்பு காரணங்களுக்காக 600 மாணவர்கள் இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால், டெஹ்ரானில் இருந்து கோம் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முதற்கட்டமாக, 110 இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரும் ஏற்பாடுகளை இந்திய தூதரகத்தின் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

உர்மியா பகுதியில் இருந்து அர்மேனியன் எல்லைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள், அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளனர். முன்னதாக, ஈரான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் பதற்றமான சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்திய மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இருநாடுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share