2035ல் விண்ணில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்! இஸ்ரோ தலைவர் சொன்ன மாஸ் அப்டேட்!
''விண்ணில் வரும், 2035க்குள், இந்தியாவுக்கான தனி விண்வெளி நிலையம் அமைக்கப்படும்,'' என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
2035ல் விண்ணில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் முக்கிய தகவல்!
சென்னை: விண்வெளித் துறையில் இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய இலக்கு, 2035க்குள் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைப்பதாகும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மேலாண்மை கல்லுாரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன், இந்தியாவின் எதிர்கால விண்வெளித் திட்டங்கள் குறித்து பேசினார். அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் 300 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும் என இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
2035க்குள் இந்தியாவுக்கென சொந்த விண்வெளி நிலையத்தை விண்ணில் அமைப்பது என்ற இலக்குடன் இஸ்ரோ செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மனிதர்கள் தொடர்பான விண்வெளித் திட்டங்களில் இந்தியாவின் திறன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் தொடர்பாகவும் முக்கிய தகவலை அவர் வெளியிட்டார். மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக, மனிதர்கள் இல்லாத சோதனை விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த ஆண்டிற்குள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒருகாலத்தில் விண்வெளி ஏவுதல்களுக்கு வெளிநாட்டு ராக்கெட்டுகள் மற்றும் தொழில்நுட்பங்களை நம்பியிருந்த இந்தியா, தற்போது வணிக ரீதியாக பல நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்திய ராக்கெட்டுகள் மூலம் இதுவரை 36 நாடுகளைச் சேர்ந்த 434 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக நாராயணன் தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உருவாகி வரும் புதிய ஏவுதளமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுமார் 2,233 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஏவுதளம், இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனம் மற்றும் தனியார் நிறுவனங்களின் சிறிய ராக்கெட்டுகளை ஏவுவதற்காக வடிவமைக்கப்படுகிறது.
இந்த ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் நிர்வாகத்தை ரூ.986 கோடி மதிப்பில் இந்திய தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான பணிகளை விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான இன்-ஸ்பேஸ் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், குலசேகரன்பட்டினத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் நேரடியாக இந்திய பெருங்கடல் பகுதிக்கு செல்லும் வகையில் பாதை அமையும். இதனால் எரிபொருள் சிக்கனம் கிடைப்பதுடன், அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவும் வாய்ப்பும் உருவாகும்.
புதிய ஏவுதளத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்திற்கு தொடக்ககட்ட ஏவுதல்களில் இஸ்ரோ தொழில்நுட்ப வழிகாட்டுதல், செயல்பாட்டு உதவி மற்றும் பயிற்சி வழங்கும் என நாராயணன் தெரிவித்தார்.
இதனால், இந்தியாவின் விண்வெளித் திட்டங்களில் அடுத்த பத்து ஆண்டுகள் மிக முக்கியமான காலகட்டமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரோவில் இருந்து வெளியேறும் விஞ்ஞானிகள்? 1,000 பேர் விலகியதாக தகவல்... புதிய திட்டங்களுக்கு சவால்!