கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: வேட்டைக்கு சென்ற 3 பேர் சுட்டுக்கொலை!
கர்நாடகாவின் வனப்பகுதியில் சட்டவிரோதமாக வேட்டையாடச் சென்ற 3 பேரை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமாக வேட்டையாடச் சென்றதாக கூறப்படும் 3 பேர் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் வனப்பகுதிக்கு உட்பட்ட ஷாக்யா அருகே நேற்று இரவு சிலர் சட்டவிரோதமாக வேட்டையாடச் சென்றதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, வேட்டைக்குச் சென்றிருந்த கும்பல் ஒரு மானை வேட்டையாடியதாகவும், பின்னர் அதன் இறைச்சியை பங்கு பிரித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அங்கு வனத்துறையினர் வந்துள்ளனர்.
இதையும் படிங்க: நிரம்பியது தண்ணீர்..! KRS அணையில் இருந்து காவிரியில் நீர் திறப்பு..! கர்நாடகா அரசு நடவடிக்கை..!
வனத்துறையினரை பார்த்ததும் வேட்டைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் வேட்டைக்குச் சென்றதாக கூறப்படும் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. தப்பியோடிய நபரை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் பரவியதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்த பொருட்களை வெளியே வீசியதாகவும் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை அலுவலகத்தைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறை மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சூழ்நிலை, வனத்துறையினர் மீது உண்மையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணைக்குப் பிறகே முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழக - கர்நாடகா எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... களத்தில் இறங்கிய போலீஸ் படை- நடப்பது என்ன?