கர்நாடகாவில் இந்தி கட்டாயம் இல்லை! 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்!
கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தியை கட்டாய பாடத்தில் இருந்து நீக்கம் செய்து அம்மாநில அரசு அறிவிப்பு.
கர்நாடகாவில் கல்வித்துறையில் மிகமுக்கிய மாற்றமாக, 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வில் இந்தி பாடத்தைக் கட்டாயப் பாடத்திலிருந்து நீக்கி அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றி வந்த கர்நாடகா, தற்போது மெல்ல இருமொழிக் கொள்கையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
கர்நாடக அரசின் இந்தப் புதிய முடிவின்படி, இந்தி பாடத்திற்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பெண் முறை ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக 'கிரேடு' (Grade) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இனி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் மொத்த மதிப்பெண்களில் இந்தி பாடத்தின் மதிப்பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படாது. இது மாணவர்களின் ஒட்டுமொத்த சதவீதத்தைப் பாதிக்காது என்பதால், இந்தி மொழியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டிய நெருக்கடி மாணவர்களுக்குக் குறையும்.
இதையும் படிங்க: தமிழகத்தின் எதிர்ப்பை தாண்டி அணை கட்டப்படும்! மேகதாது விவகாரத்தில் கர்நாடகா பிடிவாதம்!
தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக மொழிப்போர் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அரசின் இந்த முடிவு அவர்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தி பாடத்தின் முக்கியத்துவத்தைக் குறைப்பதன் மூலம், மும்மொழிக் கொள்கையிலிருந்து கர்நாடகா முழுமையாக வெளியே வர வேண்டும் என்றும், மாநில மொழியான கன்னடத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் அண்மைக்காலமாகப் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தீவிரமடைந்து வரும் நிலையில், கர்நாடக அரசின் இந்த நகர்வு தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழகம் இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ள நிலையில், தற்போது கர்நாடகாவும் அந்தப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூட்டாட்சியை காக்க தமிழகத்துடன் கைகோர்ப்போம்..! மு.க. ஸ்டாலினுக்கு சித்தராமையா கடிதம்!