3வது நாளாக தொடரும் அமளி!! லோக்சபா ஒத்திவைப்பு! பிப்.,9 காலை வரை ஒத்திவைத்து ஓம்பிர்லா அறிவிப்பு!
லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், பிப்ரவரி 9 காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9-ஆம் தேதி காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட சீன எல்லைப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மாலை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையாற்ற இருந்தார். ஆனால் எதிர்க்கட்சியினரின் கோஷங்களும், பதாகை ஆர்ப்பாட்டங்களும் காரணமாக பிரதமரின் பேச்சு ரத்து செய்யப்பட்டது. நேற்றும் அவை முடக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியை பேச அனுமதிக்கும் வரை அமளி தொடரும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் உறுதியாக தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்! சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!
இன்று காலை அவை கூடியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளுடன் அமளியை தொடங்கினர். முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அமளி தொடர்ந்ததால், பிப்ரவரி 9-ஆம் தேதி காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
அமளியை கண்டித்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, “பட்ஜெட் தொடரின் 19 மணி நேரம் 13 நிமிடங்கள் வெறும் அமளியால் வீணாகியுள்ளது. மக்கள் தங்கள் பிரச்னைகளை பேசுவதற்காகவே எம்பிக்களை தேர்ந்தெடுத்துள்ளனர். முழக்கங்களுக்காக அல்ல. அவை சுமுகமாக நடைபெற வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே அமளியில் ஈடுபட்ட 8 எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி பேச அனுமதி கோரி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பாராளுமன்ற செயல்பாடுகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினர் தங்கள் குரலை அடக்க முயல்வதாக குற்றம்சாட்டினாலும், ஆளும் கட்சி தரப்பு அவையை முடக்குவது மக்கள் பிரச்னைகளை பாதிக்கும் என்று விமர்சித்து வருகிறது. வரும் நாட்களில் இந்த பிரச்னை மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லோக்சபாவில் வரலாற்று அவமானம்!! பழிக்கு பழி தீர்த்த காங்.,! மன்மோகன் சிங்கிற்கு நடந்ததை மோடிக்கு கொடுத்து பதிலடி!