இன்று மாலை வாக்கெடுப்பு! மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீது விவாதம்!
மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் தொகுதிகள் மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று 2வது நாளாக நடக்க உள்ளது.
நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, மக்களவையில் மிக முக்கியமான இரண்டு மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் 131-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மற்றும் நாடாளுமன்ற இடங்களை விரிவுபடுத்தும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவை இன்று மாலை வாக்கெடுப்பிற்கு விடப்பட உள்ளன.
அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பதால், இந்த மசோதாக்கள் நிறைவேற அவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு (சுமார் 360 வாக்குகள்) அவசியமாகும். தற்போது ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் (NDA) 293 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகளின் ஆதரவு அல்லது சில கட்சிகளின் மறைமுக ஆதரவு மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
தொகுதி மறுவரையறை மசோதாவிற்குத் திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பலம், வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறையும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எச்சரித்துள்ளனர். டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த ஆலோசனையில், இந்த மசோதாக்களுக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் வாக்களிக்க ‘இந்தியா’ கூட்டணி முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை: 2029 தேர்தலுக்கான மெகா சூழ்ச்சி! கபில் சிபல் பகீர் குற்றச்சாட்டு!
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் நேற்று மசோதாவைத் தாக்கல் செய்து பேசுகையில் தென் மாநிலங்களின் தற்போதைய இடங்களின் எண்ணிக்கை குறையாது என்றும், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை 543-ல் இருந்து சுமார் 850-ஆக உயர்த்தப்படும் என்றும் உறுதியளித்தனர். பிரதமர் நரேந்திர மோடி இன்று விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மசோதாக்கள் விவாதிக்கப்படும் இதே வேளையில், தமிழகம் முழுவதும் இன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்தத் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தின் குரலை டெல்லியில் நசுக்க விடமாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசமாக முழங்கியுள்ளார்.
மக்களவையில் இன்று மாலை நடைபெறும் வாக்கெடுப்பு, இந்தியாவின் எதிர்கால அரசியல் வரைபடத்தை மாற்றியமைக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: வரலாற்றை படைக்க ஒன்றிணைவோம்! அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம்!