×
 

நள்ளிரவில் மருத்துவமனையில் பயங்கர தீ! 9 பிஞ்சு குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஓடிய செவிலியர்கள்!

தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீ வேகமாக பரவிய நிலையில், 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மும்பை: மஹாராஷ்டிராவில் மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தின் போது, அங்கு பிறந்து சில நாட்களே ஆன 9 பச்சிளம் குழந்தைகளை செவிலியர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் பெரும் கவனம் பெற்றுள்ளது. தீவிபத்து ஏற்பட்ட நேரத்தில் பதற்றமடையாமல் அவர்கள் செயல்பட்ட விதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. செவிலியர்களின் துணிச்சலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சத்ரபதி சாம்பாஜிநகர் நகரின் ஆகாஷ்வானி பகுதியில் ஆசியன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பிரசவ வார்டில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரசவ வார்டில் இருந்து புகை மற்றும் தீ பரவுவதை கவனித்த செவிலியர்கள், உடனடியாக அங்கிருந்த பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிறந்து சில நாட்களே ஆன 9 குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அவர்களை விரைந்து வெளியேற்றினர்.

இதையும் படிங்க: கங்கையில் கரைபுரண்ட வெள்ளம்! 100 ஆண்டு பழமையான துர்கா கோவில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வைரல்!

இதையடுத்து மருத்துவமனையின் மற்ற பகுதிகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கும் ஆபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 58 நோயாளிகளையும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீ வேகமாக பரவிய நிலையில், 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முழுமையான விசாரணைக்கு பிறகே காரணம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிபத்து ஏற்பட்டபோது செவிலியர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆபத்தான சூழலிலும் அவர்கள் காட்டிய துணிச்சல் மற்றும் உடனடி நடவடிக்கையை பாராட்டி நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நேபாள வெள்ளத்திலும் அசையாத வீடு!! கம்பீரமாய் நிற்க இதுவே காரணம்! உரிமையாளர் பகிர்ந்த தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share