இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம்! காஷ்மீரில் 370 நீக்கியபின் முக்கிய பங்காற்றியவர்!
இந்தியாவின் முதன்மை உளவுப் பிரிவான இன்டெலிஜென்ஸ் பீரோவின் (IB) இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முக்கிய உளவுப் பிரிவான இன்டெலிஜென்ஸ் பீரோ (IB) இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது நிர்வாக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
1993-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சைச் சேர்ந்த மகேஷ் தீட்சித், தற்போது இன்டெலிஜென்ஸ் பீரோவில் சிறப்பு இயக்குநராக பணியாற்றி வந்தார். உளவுத்துறையின் இரண்டாவது உயர்ந்த பதவியில் இருந்த அவர், பல முக்கிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வந்தவர் எனக் கூறப்படுகிறது.
மருத்துவராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய மகேஷ் தீட்சித், பின்னர் இந்திய காவல் சேவையில் இணைந்து பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவு தலைவராக இருந்த காலத்தில் அவரது பணி பெரிதும் கவனிக்கப்பட்டது.
இதையும் படிங்க: எந்நேரமும் இந்தியாவை உளவு பார்க்கும் பாக்., செயற்கைகோள்!! சீனாவுடன் கூட்டு சதி! காத்திருக்கும் பேராபத்து!
2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, அந்தப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலைகளை கண்காணித்து, பல்வேறு தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொண்ட அனுபவம் அவருக்கு உள்ளது.
தற்போதைய ஐபி இயக்குநர் தபன் குமார் டேகா ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்குப் பதிலாக மகேஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு இந்த நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மகேஷ் தீட்சித் இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இன்டெலிஜென்ஸ் பீரோ இயக்குநராக பதவி வகிப்பார். நாட்டின் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்து வரும் சூழலில், அவரது அனுபவமும் புலனாய்வு திறனும் இந்திய உளவுத்துறைக்கு புதிய வலிமையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்! தாவுத் இப்ராஹிம் கூட்டாளிகள் 9 பேர் கைது! சதி முறியடிப்பு!