×
 

முதலமைச்சராக அல்ல; ஒரு சாதாரண குடிமகனாக! உச்சநீதிமன்றத்தில் வாதாடும் மம்தா பானர்ஜி!

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக நேரில் ஆஜராகி வாதாடுவது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தத் திருப்பமாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தனது வாதங்களை முன்வைக்கிறார். தேர்தல் ஆணையத்தின் SIR  எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக அவர் தொடர்ந்துள்ள வழக்கில், இன்று அவரே நேரில் ஆஜராவது தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் SIR நடவடிக்கை குறித்து மம்தா பானர்ஜி கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். கொல்கத்தாவின் ஜோகேஷ் சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற மம்தா பானர்ஜி, நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று ஒரு வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தில் தனது வாதங்களைத் தாக்கல் செய்கிறார்.

இதையும் படிங்க: பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

முதலமைச்சராக இருந்தாலும், இந்த வழக்கில் ஒரு சாதாரணக் குடிமகனாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கவும் அவர் 'நேரில் ஆஜராகி வாதாட' அனுமதி கோரியுள்ளார்.

SIR-ஆல் மாநிலம் முழுவதும் சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயகப் படுகொலை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாகச் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர்கள் குறிவைத்து நீக்கப்படுவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (பிப்ரவரி 2), டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களை மம்தா பானர்ஜி நேரில் சந்தித்தார். SIR நடவடிக்கையால் தனது உறவினர்களை இழந்த குடும்பத்தினர் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட 14 பேருடன் அவர் தேர்தல் ஆணையத்திற்குச் சென்றார்.

சுமார் 90 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த அந்தச் சந்திப்பில், தேர்தல் ஆணையரின் பதில் திருப்திகரமாக இல்லை என்றும், தங்களை அவர் அவமதித்துவிட்டதாகவும் கூறி மம்தா பானர்ஜி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். "தேர்தல் ஆணையம் பாஜக-வின் முகவராகச் செயல்படுகிறது" என்று அவர் அப்போது ஆவேசமாகத் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. SIR-ஆல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும், பழைய வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே தேர்தலை நடத்தவும் மம்தா பானர்ஜி இன்று வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே வழக்கறிஞராக ஆஜராவதால், உச்சநீதிமன்ற வளாகத்தில் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் இருக்கு..!! விரிவான விசாரணை தேவை..!! பகீர் கிளப்பிய மம்தா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share