ஒடிசா, மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் வேட்டை.. கொத்து கொத்தாக சிக்கிய துப்பாக்கிகள்..!
கலவரம் பாதித்த மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் மற்றும் சக்தி வாய்ந்த வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவ்வப்போது கலவரம் வெடித்தபடி உள்ளது. குக்கி, மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் போக்கால், அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. கடந்த வாரம் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த தலைவர் ஒருவரை சிபிஐ கைது செய்ததை தொடர்ந்து மீண்டும் கலவரம் வெடித்தது. பல இடங்களில் டயர்கள் எரிக்கப்பட்டு, வீடுகள், கடைகள் மீது வீசப்பட்டன.
குறிப்பாக இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், காக்சிங், தொவ்பால் ஆகிய மாவட்டங்களில் கலவரம் பெரிய அளவில் வெடித்தது. இதையடுத்து, 5 மாவட்டங்களிலும் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டு, கலவரக்காரர்களை ஒடுக்கும் பணியில் போலீஸ் - துணை ராணுவம் ஈடுபட்டது.
இதையும் படிங்க: பற்றி எரியும் மணிப்பூர்.. வெடிக்கும் போராட்டங்கள்; கட்டான இணைய சேவைகள்..!!
மேலும் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போதைக்கு இந்த ஐந்து மாவட்டங்களில் மட்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுதும் சோதனை நடத்தி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் கூறினர். மணிப்பூர் மாநில எல்லையில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி, பிற மாநிலங்களில் இருந்து ஆயுத சப்ளை வருவதை தடுத்து நிறுத்தும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
மணிப்பூரில், நுாற்றுக்கணக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கலவரம் ஏற்படாமல் இருக்கவும், கலவரத்தை துாண்டும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அவர்களை உடனே கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறினர்.
இதேபோல, ஒடிசாவில் சிலர் கள்ள துப்பாக்கிகள் தயாரித்து, அவற்றை பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ரவுடி கும்பலுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. சமீபத்தில் உபி மற்றும் மபியில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் ஒடிசாவில் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிந்தது.
இதையடத்து, தலைநகர் புவனேஸ்வரில் ஒடிசா போலீசார் சிறப்பு படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்த தேடுதல் வேட்டையில், சந்தேகத்திற்குரிய நபர்கள் நால்வர் சிக்கினர். அவர்களிடம் இருந்து லைசென்சு இல்லாத துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். நான்கு பேர் கும்பலுக்கு துப்பாக்கிகள் கொடுத்து உதவிய 5வது நபர் குறித்து விசாரித்தனர்.
ஒடிசாவை சேர்ந்த ஷேக் ஷகீல் என்பவன், உபியை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் மேலும் மூவருக்கு துப்பாக்கிகள் விற்பனை செய்தது தெரிந்தது. விசாரித்த இடத்திலேயே நால்வரை கைது செய்த போலீசார், ஷேக் ஷகீலின் இருப்பிடத்திற்கு சென்று அவனையும் பிடித்தனர்.
அங்கிருந்த துப்பாக்கிகள், குண்டுகள், மொபைல் போன்கள், ஆயுத சப்ளைக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த வகையில் மொத்தம் 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஷேக் ஷகீல், துப்பாக்கிகளை தயாரித்தும் கள்ளச் சந்தையில் விலை கொடுத்து வாங்கியும், பல்வேறு ரவுடி கும்பலுக்கு சப்ளை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் பல மாநிலங்களை சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பதால், முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. ஆயுத தயாரிப்பு, சப்ளை, கடத்தல் கும்பல் குறித்து விரிவான விசாரணை நடத்தி அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, புவனேஸ்வர் போலீஸ் கமிஷனர் கூறினார்.
இதையும் படிங்க: நீட் முடிவுகள்... ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறாத நிலை... தமிழகம் பின்னடைவு!