ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!
மாநிலங்களவையில் உள்ள 10 ஆம் ஆத்மி எம்.பி.க்களில், 7 பேர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அதிரடி அறிவிப்பு.
தேசிய அரசியலில் பெரும் திருப்பமாக, ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முன்னணித் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா இன்று முறைப்படி பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தார். அவருடன் மாநிலங்களவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் 10 எம்.பி.க்களில், ராகவ் சத்தா உட்பட 7 பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு இருந்த 10 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் (2/3) அதிகமானோர் பாஜகவில் இணைந்துள்ளனர். ராகவ் சத்தாவுடன் சந்தீப், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், ஸ்வாதி மாலிவால், விக்ரம்ஜித் சிங் சாஹ்னி மற்றும் ரஜிந்தர் குப்தா ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் (Anti-Defection Law) இருந்து தப்பிக்க, 10-ல் 7 பேர் (மூன்றில் இரண்டு பங்கு) இணைந்துள்ளதால், இவர்களது எம்.பி. பதவிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என ராகவ் சத்தா குறிப்பிட்டுள்ளார்.
சமீபகாலமாக ராகவ் சத்தாவுக்கும் ஆம் ஆத்மி தலைமைக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி, மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அசோக் மிட்டல் நியமிக்கப்பட்டார் (தற்போது அவரும் பாஜகவில் இணைந்துள்ளார்). நான் 15 ஆண்டுகளாக ரத்தம் சிந்தி வளர்த்த ஆம் ஆத்மி, தற்போது தனது கொள்கைகளில் இருந்து விலகிவிட்டது. இது தேச நலனுக்காக அல்லாமல், தனிநபர் நலனுக்காகச் செயல்படும் கட்சியாக மாறிவிட்டது என ராகவ் சத்தா விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்! தளியில் பாஜக வேட்பாளருக்காக சந்திரபாபு நாயுடு அதிரடி பரப்புரை!
பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா கடந்த சில ஆண்டுகளாகவே நான் ஒரு தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதன் (Right man in the wrong party) என்பதை உணர்ந்தேன். அதனால் இன்று ஆம் ஆத்மியிடம் இருந்து விலகி பொதுமக்களுக்காக பாஜகவுடன் கைகோர்த்துள்ளேன் என்றார்.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் பலம் தற்போது வெறும் 3 எம்.பி.க்களாகக் குறைந்துள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயாராகி வரும் வேளையில், கட்சியின் முக்கிய முகம் மற்றும் வியூகவாதி ராகவ் சத்தா வெளியேறியிருப்பது அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்து முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், தேசிய அளவில் நடைபெற்றுள்ள இந்த 'மெகா' கட்சித் தாவல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "அண்ணாமலைக்கு எப்படித் தெரியும்? அரசு இயந்திரம் பாஜகவின் கைப்பாவையா?" - கார்த்தி சிதம்பரம் காட்டம்!