“அறியாமல் செய்த தவறு; அரசியலாக்க வேண்டாம்”: அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!
மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சுக்கு, நானும் ஒரு மாற்றுத்திறனாளி தாய்க்குப் பிறந்த மகள் தான் அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு எக்ஸ் (X) தளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செல்வி. விருதை மகள் கீர்த்தனா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, பின்வரும் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அண்மையில் தான் தெரிவித்த கருத்துகள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை அறிவதாகவும், அந்த வார்த்தைகள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு மாற்றுத்திறனாளி தாய்க்குப் பிறந்த மகள் என்றும், அந்த வலியும் வேதனையும் தனக்கும் நன்றாகத் தெரியும் என்றும் அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: லிஸ்ட் போட்டு தூக்கும் தவெக அரசு!
மாற்றுத்திறனாளிகளை மரியாதைக்குறைவாகப் பேச வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஒருபோதும் இல்லை என்றும், அறியாமல் செய்த ஒரு தவறை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த மே 12 அன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், அமைச்சர் கீர்த்தனா மாற்றுத்திறனாளிகள் குறித்துக் குறிப்பிட்ட சில வார்த்தைகள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பின. எதிர்க்கட்சிகள் இதனைக் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது அமைச்சர் நேரடியாக முன்வந்து மன்னிப்பு கோரியிருப்பது இந்த விவகாரத்தில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைச்சர் உடனடியாக மன்னிப்பு கோரியுள்ளதை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!