×
 

ஆபரேசன் சிந்தூர்! வீர மரணத்தை தழுவிய 6 வீரர்கள்!! முதல்முறையாக பொதுவெளியில் பெயர் வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் 6 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் பெயர்கள் முதல் முறையாக தற்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்த 6 இந்திய வீரர்களின் பெயர்கள் முதல் முறையாக பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் (National War Memorial) அவர்களின் பெயர்கள் 3டி முறையில் பொறிக்கப்பட்டுள்ளன.

2025 ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழந்தனர். ஒரு குதிரை ஓட்டியும் பலியானார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. 

இதற்கு பதிலடியாக மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. பல முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்தது.

இதையும் படிங்க: பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

பாகிஸ்தான் தரப்பில் டிரோன் உள்ளிட்ட தாக்குதல்கள் நடைபெற்றன. இரு நாட்டு மோதல் இரண்டு நாட்கள் நீடித்த பின்னர் மே 9ஆம் தேதி அமைதி ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த ராணுவ நடவடிக்கையில் 6 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள அவர்களின் பெயர்கள்: 10வது காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த சுபேதார் மேஜர் பவன் குமார், ஜம்மு காஷ்மீர் 4வது லைட் இன்பென்ட்ரி பட்டாலியன் ரைபிள்மேன் சுனில் குமார் (வீர் சக்ரா பதக்கம்), 5வது பீல்ட் ரெஜிமென்ட் லான்ஸ் நாயக் தினேஷ் குமார், 851 லைட் ரெஜிமென்ட் ஏவியேஷன் டெக்னீஷியன் மூத் முரளிநாயக், 237 பீல்ட் ஒர்க்ஷாப் கம்பெனி ஹவில்தார் சுனில் குமார் சிங், இந்திய விமானப்படை 39 விங் சார்ஜன்ட் சுரேந்திர குமார் (வாயு பதக்கம்) ஆகியோர் ஆவர்.

தேசத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்த வீரர்களின் தியாகம் நாடு முழுவதும் நினைவுகூரப்படுகிறது. தேசிய போர் நினைவிடத்தில் அவர்களின் பெயர்கள் நிலையான இடம் பெற்றுள்ளது, அவர்களின் துணிச்சலை எதிர் தலைமுறையினரும் போற்றும் வகையில் அமைந்துள்ளது. இந்த வெளியீடு ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் மரியாதையைத் தருகிறது.

ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை இது உலகுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.
 

இதையும் படிங்க: ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் கதற விட்ட இந்தியா!! மாஸ் கட்டிய கடற்படை! ராஜ்நாத் சிங் பெருமிதம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share