×
 

அழகான பொண்ணு வீடியோ கால் பண்ணும்.. காசு கொடுக்கும்.. பாக்., உளவாளி வலையில் விழுந்தவரின் பகீர் வாக்குமூலம்..!

சமூக வலைதளத்தில் பிரியா சர்மா என்கிற பெயரில் செயல்பட்ட கணக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.

ஹரியானாவின் ரேவரியை சேர்ந்த விஷால் யாதவ் என்பவரை ராஜஸ்தான் உளவுத் துறை போலீஸார் கைது செய்தனர். இவர் டெல்லியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு கடற்படையின் ரகசிய தகவல்களை வழங்கி வந்துள்ளார்.

அண்மையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் பிரியா சர்மா என்ற பெண்ணிடம் தொடர்பில் இருந்துள்ளனர்.

பிரியா சர்மாவின் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்தபோது கடற்படை ஊழியர் விஷால் யாதவ் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பாக அவர் கைது செய்யப்பட்டார் என ராஜஸ்தான் உளவுத் துறை போலீஸார் தெரிவித்தனர். சமூக வலைதளத்தில் பிரியா சர்மா என்கிற பெயரில் செயல்பட்ட கணக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்ததாகும். 

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பாக்., பின்னும் ரகசிய சதிவலை.. மீண்டும் கட்டப்படும் பயங்கரவாதிகள் முகாம்..!

இவர்களிடம் எப்படி விஷால் யாதவ் சிக்கினார் என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலம் திகைப்படைய செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்எஸ்பி தேர்வில் தேர்ச்சி பெற்று கடற்படையில் இணைந்தேன். எனக்கு ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். அதற்கு அடிமையாகி பணத்தை இழந்தேன். அப்போது சமூக வலைதளத்தில் பிரியா சர்மா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. 

அந்த பெண்ணின் புகைப்படம் அழகாக இருந்தது. அவருடன் நட்பை வளர்த்தேன். என்னிடம் காதல் மொழியில் பேசுவது போலவே கடற்படை சார்ந்த சில விவரங்களை கேட்பார். அவருக்கு வேண்டிய தகவல் சொன்னால் ஒரு தகவலுக்கு 6,000 ரூபாய் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைப்பார். கடனில் சிக்கி இருந்த நேரத்தில் அது எனக்கு பெரிய உதவியாக இருந்தது. 

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது மிக முக்கியமான தகவல்களை கேட்டார். எனக்கு தெரிந்த கடற்படை அதிகாரிகளிடம் விசாரித்து அவருக்கு சொன்னேன். அப்போது ஒரு தகவலுக்கு 50,000 ரூபாய் கொடுத்தார். சிலமுறை கிரிப்டோகரன்சி மூலம் பணத்தை அனுப்பி வைத்தார். இப்படியாக எனக்கு 2 லட்சம் வரை கிடைத்தது.

வாட்ஸ் அப், பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக பிரியா சர்மாவுடன் தொடர்பில் இருந்தேன். ஆரம்பத்தில் பிரியா சர்மா ஐஎஸ்ஐ உளவாளி என்பது தெரியாது. ஆனால் நான் அளிக்கும் ரகசிய தகவல்களுக்கு அவர் பணம் வழங்கியபோது அவர் ஐஎஸ்ஐ உளவாளி என்பதை அறிந்து கொண்டேன்.

பணத்துக்கு ஆசைபட்டு படுகுழியில் விழுந்துவிட்டேன் என கடற்படை ஊழியர் விஷால் யாதவ்  வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் உளவாளிகள் சமூக வலைதளங்களில் உலா உருகின்றனர். இதுதொடர்பாக உஷாராக இருக்க வேண்டும் என அனைத்து அரசு துறைகளையும் இந்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு கொம்பு சீவிய சீனா..! உளறிக்கொட்டிய ராணுவ அமைச்சரால் உண்மை அம்பலம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share