நிதி வேண்டாம்! நீதி வேண்டும்! இழப்பீடு கொடுங்கள்! இந்தியா, சீனாவை நோக்கி நேபாளம் வைத்த குற்றச்சாட்டு!
நுவாகோட் மாவட்டத்தின் பெத்ராவதி பகுதியில் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கியுள்ள மாபெரும் பனி சரிவு, திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்கு உலகளாவிய பருவநிலை மாற்றமே காரணம் என அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக அதிக அளவில் கார்பன் உமிழ்வை ஏற்படுத்தும் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தப் பாதிப்புகளுக்கான பொறுப்பை ஏற்று, நிவாரணத்துக்கு பதிலாக காலநிலை இழப்பீடு வழங்க வேண்டும் என்று நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கானல் வலியுறுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவை வெறும் இயற்கைப் பேரிடராக மட்டும் பார்க்க முடியாது என்பது அவரது வாதமாக உள்ளது. உலகளாவிய புவி வெப்பமயமாதலால் இமயமலைப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை நேபாளம் நேரடியாக எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இது தொண்டு அல்ல; காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட சேதத்துக்கான நீதி மற்றும் இழப்பீடு” என்ற அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என நேபாளம் கூறியுள்ளது. இதற்காக ‘நஷ்டம் மற்றும் பாதிப்புக்கான நிதி’ அமைப்பிடம் முறையான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது! 275 இந்தியர்கள் உள்பட 3,916 பேர் மாயம்! 7-வது நாளாக தேடுதல் வேட்டை!
இதற்கிடையே, பேரிடரின் மனித இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் வெளிநாட்டவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நுவாகோட் மாவட்டத்தின் பெத்ராவதி பகுதியில் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீட்புப் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு புறம் புதிய வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது. போட்டே கோஷி, திரிசூலி உள்ளிட்ட நதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேபாளத்தின் இந்தக் கோரிக்கை இந்தியா, சீனா உள்ளிட்ட அதிக கார்பன் உமிழ்வு நாடுகளின் பொறுப்பு குறித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்தில் மீண்டும் பதற்றம்! ஆறுகள் கரைபுரளும் அபாயம்! 30 மாவட்ட மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை!