நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட என்ன காரணம் என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகள் செயற்கைக் கோள் படங்களை ஆய்வு செய்கின்றனர்.
காத்மாண்டு: நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்குக்கான காரணத்தை கண்டறியும் ஆய்வில், செயற்கைக்கோள் படங்கள் முக்கிய தடயங்களை வழங்கியுள்ளன. பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்ததுடன், அதன் அடிப்பகுதியில் இருந்த மலைப்பாறையும் மிகப்பெரிய அளவில் சரிந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பேரழிவில் இதுவரை 392 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளம் மற்றும் திபெத்தில் 1,468 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் இந்தியர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்திய அரசின் தகவல்படி, தொடர்பு கொள்ள முடியாத இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 290 ஆக உள்ளது. ஏற்கனவே 84 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பேரழிவு ஏற்பட்ட பகுதிகளில் விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் படங்களை வைத்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புவியமைப்பியல் வல்லுநர்களான கிறிஸ்டன் குக் மற்றும் டான் ஷுகர் உள்ளிட்டோர் ஆய்வு செய்த படங்களில், திபெத் எல்லைக்கு அருகே உள்ள லாங்டாங் லிருங் சிகரத்தின் பகுதியில் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்திருப்பது முதலில் தெரியவந்தது.
இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
ஆரம்பத்தில் கிடைத்த செயற்கைக்கோள் படங்கள் மேகங்கள் மற்றும் வெள்ளத்தால் எழுந்த தூசி காரணமாக தெளிவாக இல்லை. பின்னர் கிடைத்த தெளிவான படங்களை ஆய்வு செய்தபோது, பனிப்பாறை மட்டும் சரியவில்லை என்பதும், அதன் கீழே இருந்த மலைப்பாறையின் ஒரு பெரிய பகுதியும் ஒரே நேரத்தில் சரிந்திருப்பதும் தெரியவந்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த மிகப்பெரிய சரிவின்போது பாறைகள், பனிக்கட்டிகள் மற்றும் சேறு ஆகியவை பள்ளத்தாக்கை நோக்கி வேகமாக அடித்துச் சென்றிருக்கலாம். இதனால் ஆறுகளில் திடீரென நீரின் அளவும், சேற்றின் அளவும் அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு உருவானதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனமான USGS-ன் ஆய்விலும், இந்த நிகழ்வு லாங்டாங் லிருங் மலையின் பனிப்பாறை சூழ்ந்த பகுதியில் ஏற்பட்டதாகவும், சரிவு உருவாக்கிய அதிர்வு 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு சமமான ஆற்றலைக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பேரழிவின் முழுமையான காரணம் மற்றும் அதன் தொடர் நிகழ்வுகளை உறுதி செய்ய விஞ்ஞானிகள் தொடர்ந்து செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்! இந்தியாவுக்கும் காத்திருக்கும் அடுத்த ஆபத்து! பீகார், உ.பி.க்கு எச்சரிக்கை!