இன்ஸ்டா, பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்! பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளர் வருத்தம்!
பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி கேட்ட நார்வே பத்திரிகையாளர் ஹெல்லேவின் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓஸ்லோ: பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பிய நார்வேயைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சனின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த திங்கள்கிழமை பிரதமர் மோடியும், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோரும் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சன் எனும் பத்திரிகையாளர், “மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்தியாவை ஏன் நம்ப வேண்டும்?” என்ற கேள்வியை பிரதமர் மோடியிடம் எழுப்பினார்.
இரு தலைவர்களும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மாட்டார்கள் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கேள்வி எழுப்பப்பட்டதும் இரு தலைவர்களும் உடனடியாக அரங்கிலிருந்து வெளியேறினர்.
இதையும் படிங்க: பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!
இதைத் தொடர்ந்து ஹெல்லே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பத்திரிகை சுதந்திரம் குறித்து பதிவிட்டார். இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பின்தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
Helle Lyng went from 555 followers to 10.1K followers in just 15 hours.
— Travis Kutty (@TravisKutty) May 19, 2026
Take notes, other international journalists.
Apparently, asking one actual question in a Modi briefing is now the fastest growth hack on Twitter. https://t.co/eGpASZGCgj pic.twitter.com/IJd45oJSkq
இந்நிலையில், அவரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளதாக ஹெல்லே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். முடக்கப்பட்டதற்கான ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்துள்ளார். “பத்திரிகை சுதந்திரத்திற்காகக் கொடுக்கப்படும் ஒரு சிறிய விலைதான் இது. ஆனால், இதுபோன்ற அனுபவத்தை நான் இதற்கு முன் சந்தித்ததில்லை” என்றும் அவர் உணர்ச்சிபூர்வமாகப் பதிவிட்டார்.
இந்த சம்பவம் சர்வதேச ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சமூக ஊடக தணிக்கை மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதன் ஒரு பக்க விளைவாக, ஹெல்லே லிங்கின் எக்ஸ் பின்தொடர்வோர் எண்ணிக்கை வெடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சம்பவத்துக்கு முன் 800-க்கும் குறைவாக இருந்த அவரது பின்தொடர்வோர் எண்ணிக்கை, இப்போது 45,000-க்கும் மேல் உயர்ந்துள்ளது.
இந்த சர்ச்சை இந்தியாவின் படிமத்தையும், சர்வதேச ஊடக உறவுகளையும் பாதிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். நார்வேயில் இருந்து வந்துள்ள இந்த சம்பவம் உலகெங்கும் பத்திரிகை சுதந்திரம் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!