பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!
வெளிநாடுகளுக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன் பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது நார்வே நாட்டுக்கு சென்றுள்ளார்
ஓஸ்லோ: வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது நார்வேயைச் சேர்ந்த இளம் பெண் பத்திரிகையாளர் ஹெல்லே லிங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் வெளியேறிய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, நார்வே சென்றார். நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். உரையை வாசித்து முடித்த பிரதமர் மோடி கிளம்பத் தயாரானபோது, ஹெல்லே லிங் திடீரென எழுந்து, “உலகின் மிகவும் சுதந்திரமான ஊடகங்களிடம் நீங்கள் ஏன் சில கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறினார்.
இந்தச் சம்பவத்தை வீடியோவாக பகிர்ந்த ஹெல்லே லிங், “உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்தியா 157வது இடத்தில் உள்ளது. பாலஸ்தீனம், அமீரகம், கியூபா போன்ற நாடுகளுடன் இந்தியா பின்தங்கியுள்ளது” என்று சுட்டிக்காட்டினார். மேலும், “அதிகாரத்தில் இருப்பவர்கள் பதில் சொல்லாவிட்டால் நான் மீண்டும் கேட்பேன். இதழியல் என்பது அப்படித்தான்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நியாபகம் இருக்கா 'Melodi'!! இத்தாலி பிரதமர் மெலோனியை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி!
இதையடுத்து இந்திய தூதரகம் அவரை பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அழைத்தது. அங்கு மேற்கு நாடுகளுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜிடம் ஹெல்லே லிங் இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து காரசாரமான கேள்விகளை எழுப்பினார். தூதர் ஜார்ஜ், “சில என்ஜிஓ அறிக்கைகளை மட்டும் வைத்து இந்தியாவை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்” என்று பதிலளித்தார்.
இதனிடையே இந்திய சமூக வலைதளங்களில் ஹெல்லே லிங் மீது “வெளிநாட்டு உளவாளி” என்று கடும் விமர்சனம் எழுந்தது. இதற்கு பதிலளித்த ஹெல்லே, “நான் எந்த உளவாளியும் அல்ல. இதழியல் என்பது கேள்வி கேட்பதுதான்” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “கேள்விக்கு பதிலளிக்க பயப்படும் பிரதமர் இந்தியாவின் பிம்பத்தை சேதப்படுத்துகிறார்” என்று விமர்சித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இந்தியா-நார்வே உறவுகளிலும், பத்திரிகை சுதந்திர விவாதத்திலும் புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஃபாரின் ட்ரிப்புக்களுக்கு கூடுதல் வரி விதிப்பு?! துளி கூட உண்மையில்லை! பிரதமர் மோடி மறுப்பு!