×
 

கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

திமுகவில் இணைந்த பிறகு தன் காரில் மற்றும் சட்டை பாக்கெட்டில், ஜெயலலிதா படத்துக்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துள்ளார் ஓபிஎஸ்.

தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய நிகழ்வு நேற்று (பிப்ரவரி 27, 2026) நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), திமுகவில் இணைந்தார். இது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இத்தகைய கட்சி மாற்றங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

அதிமுகவில் இருந்து 2022-இல் நீக்கப்பட்ட ஓபிஎஸ், கடந்த காலங்களில் கட்சியில் மீண்டும் இணைவதற்கும், ஒற்றுமை ஏற்படுத்துவதற்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அவரது கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால், அவர் தனி அணி அமைக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகின. ஆயினும், அவருடன் நெருங்கிய ஆதரவாளர்கள் பலர் விலகி, திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகளில் இணைந்தனர். இதனால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், ஓபிஎஸ் திமுகவை நோக்கி திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

நேற்று காலை, சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற ஓபிஎஸ், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இணைப்பு விழாவில் அவரது மகன் ஓ.பி. ரவீந்தரநாத் (முன்னாள் எம்.பி.), உசிலம்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த ஐயப்பன், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். "தாய்க்கழகத்தில் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி" என ஓபிஎஸ் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து, அவர் தலைமைச் செயலகம் சென்று சட்டசபை செயலாளரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார். ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இணைப்பு நிகழ்வின் போது, ஓபிஎஸ்ஸின் காரில் காலையில் முன்புற டேஷ்போர்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் இருந்தது. ஆனால், திமுகவில் இணைந்த பிறகு அந்த புகைப்படம் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புகைப்படம் பொருத்தப்பட்டுள்ளது. 

மேலும், காரின் முன்பகுதியில் திமுக கொடியும் ஏற்றப்பட்டுள்ளது. இரவில் அவர் தோன்றியபோது, அவரது சட்டை பாக்கெட்டிலும் ஜெயலலிதா படத்துக்கு பதிலாக ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இது அரசியல் ரீதியாக மிகுந்த குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராகவும், மூன்று முறை முதலமைச்சராகவும், ஒரு முறை துணை முதலமைச்சராகவும் பதவி வகித்த ஓபிஎஸ், இப்போது எதிர்க்கட்சியான அதிமுகவை விட்டு ஆளும் திமுகவில் இணைந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் அவருக்கு முக்கிய பொறுப்பும், அவரது ஆதரவாளர்களுக்கு தேர்தல் சீட்களும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தென் மாவட்டங்களில் தேவர் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கும், 2026 தேர்தலில் திமுகவுக்கு பலம் சேர்க்கும் முயற்சியாகவும் கருதப்படுகிறது.இந்நிகழ்வு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது எனலாம். 

இதையும் படிங்க: திமுகவில் இணைந்தது வெட்கக்கேடான செயல்.. சுயநலத்தின் மொத்த உருவம் ஓபிஎஸ்..!! கே.பி முனுசாமி சாடல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share