×
 

மனித குலத்திற்கே எதிரானது பாகிஸ்தான்.. காஷ்மீரில் வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி..!

ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராக தீவிரமாக செயல்படும் ஒரு நாடு பாகிஸ்தான். இதற்கு ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான வளைவு ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து செனாப் நதியின் கிளை நதியான அன்ஜி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன்மூலம்  காஷ்மீரிலுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதைத் திட்டம் நிறைவு பெறுகிறது. 

நீண்ட காலமாக நடந்து வந்த இந்த ரயில் திட்டத்தின் மூலம் ஜம்மு – ஸ்ரீநகர் இடையே பயண நேரம் வெகுவாக குறையும். தொடர்ந்து ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரையிலான 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் கத்ராவில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

இதையும் படிங்க: ஈபிள் டவரை மிஞ்சும் உயரம்! 1315 மீட்டர் நீளம்.. ரூ.1,400 கோடியில் கட்டப்பட்ட செனாப் பாலத்தை திறந்து வைத்தார் மோடி..!

பஹல்காம் தாக்குதல் மூலம் காஷ்மீர் வளர்ச்சியை தடுப்பதுதான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தின் சக்திவாய்ந்த சின்னங்கள். நமது இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். சுற்றுலாத்துறையில் பல்வேறு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

துரதிர்ஷ்டவசமாக, நமது அண்டை நாடு மனிதகுலத்திற்கு மட்டுமல்ல, சுற்றுலாவிற்கும் எதிராக செயல்படுகிறது. ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராக தீவிரமாக செயல்படும் ஒரு நாடு பாகிஸ்தான். இதற்கு ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. பஹல்காம் சம்பவம் இந்தியாவில் கலவரங்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது. அதனால்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காஷ்மீரிகளின் வருமானத்தைத் தடுக்க பாகிஸ்தான் செய்த சதி செயலாகும். செனாப், அஞ்சி பாலங்கள் காஷ்மீரில் செழிப்புகளை கொண்டு வரும். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயிலில் பயணம் தற்போது நிஜமாகிவிட்டது. மாதா வைஷ்ணவ தேவியின் ஆசிர்வாதத்துடன், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு, செனாப் பாலம் மற்றும் அஞ்சி பாலத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று, ஜம்மு-காஷ்மீர் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களைப் பெற்றுள்ளது. ஜம்முவில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.


ரூ.46,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த புதிய வளர்ச்சிக்கு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் நக்சல் வேட்டை.. ₹50 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கிய தலை உருண்டது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share