சகோதர நாடு என நினைத்தோம்! இப்படியா பண்ணுவீங்க? UAE மீது பாக்., எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் பயணிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும், இது தங்களுக்கு அவமரியாதையாக இருந்ததாகவும் ஆசாத் கைசர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானியர்கள் பாகுபாடாக நடத்தப்பட்டதாக அந்நாட்டு எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் ஆசாத் கைசர் குற்றம்சாட்டியுள்ளார். விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய மற்றும் அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஹோட்டல் வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாக அவர் கூறியிருப்பது பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகராக பதவி வகித்த ஆசாத் கைசர், தற்போது எம்.பி.யாக உள்ளார். சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றிருந்த அவர், அங்கு ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறிய தகவலின்படி, UAE-க்கு சென்றிருந்தபோது திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் தங்குவதற்கு ஹோட்டல் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்தியா மற்றும் அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஹோட்டலில் தங்குவதற்கான வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!
இதனால் பாகிஸ்தான் பயணிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும், இது தங்களுக்கு அவமரியாதையாக இருந்ததாகவும் ஆசாத் கைசர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக UAE அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 லட்சத்துக்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் வசித்து வருவதாகவும், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாகிஸ்தானியர்களின் உழைப்பும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் நல்லுறவை கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுவது கவலை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா-ஈரான் மோதலின்போது பாகிஸ்தான் நடுநிலை வகித்ததாக கூறிய அவர், அதற்குப் பிறகும் பாகிஸ்தானியர்கள் இவ்வாறு நடத்தப்பட்டதாக கூறப்படுவது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக தலையிட்டு, UAE அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும் ஆசாத் கைசர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், பாகிஸ்தான் எம்.பி. முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டு குறித்து UAE தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளதா என்பது தெளிவாகவில்லை. எனவே, சம்பவத்தின் முழு பின்னணி மற்றும் அந்த அறிவிப்பு உண்மையில் எந்த சூழ்நிலையில் வெளியிடப்பட்டது என்பது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்போதே உறுதி செய்ய முடியும்.
இதையும் படிங்க: மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு