உயர்கிறதா கேபிள் டி.வி., DTH சேவைகளுக்கான கட்டணம்..?? விளக்கமளித்த மத்திய அரசு..!!
அதிகப்படியான லைசென்ஸ் கட்டணம் விதிக்கப்பட உள்ளதால், லட்சக்கணக்கானவர்களின் வேலையும் பறிபோக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் (DTH) சேவைகளுக்கான கட்டணம் 4 முதல் 6 மடங்கு உயர்த்தப்பட உள்ளதாகவும், இதனால் 11 கோடி டிவி இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றும், லட்சக்கணக்கானோர் வேலையிழப்பை சந்திக்க நேரிடும் என்றும் பரவும் தகவல்கள் அடிப்படையற்றவை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் ‘தொலைதொடர்பு விதிகள் 2026’ தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையை மையமாக வைத்து தவறான செய்திகள் வேகமாகப் பரவின. இதனால் பொதுமக்கள் மத்தியில் கணிசமான அச்சம் ஏற்பட்டது. பலரும் இந்த தகவலை பகிர்ந்து வருவதால், தொலைக்காட்சி சேவை பயனர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர்.
இதையடுத்து, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) வெளியிட்ட அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “இணையதளங்களில் பரவும் இந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு அறிக்கையில் கேபிள் டிவி அல்லது டிடிஹெச் சேவைகளுக்கான கட்டண உயர்வு தொடர்பான எந்த பிரிவும் இல்லை என்று அரசு வலியுறுத்தியது.
இதையும் படிங்க: "உண்ணாவிரதத்தை கைவிட தயார்! ஆனா.. மத்திய அரசுக்கு சோனம் வாங்சு விதித்த நிபந்தனைகள்!
இந்த வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள், பங்குதாரர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் தங்கள் கருத்துகளை வரும் 27-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். தொலைக்காட்சி மற்றும் ரேடியோ சேவைகளுக்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஒருங்கிணைப்பதே இந்த வரைவு விதிகளின் முக்கிய நோக்கம். தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்புத் துறையின் செயல்பாடுகளை எளிதாக்கி, தற்போதைய நடைமுறைகளை மேலும் சுலபமாகவும் இணக்கமானதாகவும் மாற்றுவதை இது ஊக்குவிக்கிறது.
அரசின் இந்த தெளிவுபடுத்தல் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தவறான தகவல்கள் பரப்புவதன் மூலம் பொதுநலனுக்கு எதிரான செயல்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இத்தகைய வரைவு அறிக்கைகள் வெளியிடப்படும் போது, அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த விவகாரம் தொலைக்காட்சி துறையில் உள்ள பல லட்சம் ஊழியர்கள் மற்றும் கோடிக்கணக்கான நுகர்வோருக்கு நிச்சயம் ஆறுதல் அளித்துள்ளது.
இதையும் படிங்க: யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம்..?? மத்திய அரசு ஆலோசனை..!!